Ad Widget

மஹிந்த – மைத்திரி அணிகள் இணைப்பு அறுவர் குழு எண்மராகியது! தேர்தலுக்காக விசேட ஏற்பாடாம்!!

மைத்திரி அணி – மஹிந்த அணி என இரண்டாகப் பிளவடைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைப்பதற்காக ஏற்கனவே ஆறு பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில், கட்சியை ஒற்றுமைப்படுத்தி பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எட்டுபேர் அடங்கிய மற்றுமொரு குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்துள்ளார்.

பொதுத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேற்படி குழுவினருக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் நாளைமறுதினம் திங்கட்கிழமை முக்கிய சந்திப்பொன்றும் நடத்தப்படவுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தலைமையிலான இந்தக் குழுவில் ராஜித சேனாரட்ன, மஹிந்த சமரசிங்க, சரத் அமுனுகம, ரெஜினோல்ட் குரே, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ஜனக பண்டார தென்னக்கோன், திலங்க சுமதிபால ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்குமிடையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட சந்திப்பின்போதே இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்தலுக்கான விஞ்ஞாபனத்தைத் தயார் செய்யும் பொறுப்பும் இந்தக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி என்ற அடிப்படையில் அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் 8 பேர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது என சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

Related Posts