Ad Widget

மஹிந்த பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார்? ‘வெற்றிலை சின்னத்தில் புதிய கூட்டணிக்கும் முடிவு!

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பங்காளிகளாக இருக்கும் கட்சிகள் வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையில் போட்டியிடத் திட்டமிட்டு வருகின்றன.

mahintha

இந்தக் கூட்டணி பிரதான பங்காளிக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பயன்படுத்திய வெற்றிலை சின்னத்தையே தமது சின்னமாகப் பயன்படுத்தவும் விரும்புகின்றன என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேன தெரிவானார்.

இதையடுத்து வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உண்மையான சின்னமான கை சின்னத்திலேயே போட்டியிட ஆர்வம் காட்டப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் நிமால் சிறிபால டிசில்வாவுக்கு கூட்டணிக் கட்சிகள் பெரும் எதிர்ப்பை வெளியிட்டன.

இதையடுத்து கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷவை சந்தித்து தாங்கள் நாடாளுமன்றில் தனித்து இருக்க முடிவு செய்துள்ளனர் எனத் தெரிவித்தனர்.

சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுள் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:

“கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைந்தாலும் அவருக்குக் கிடைத்த 57 இலட்சம் வாக்குகளுக்கு மேல் கிடைத்த மக்கள் ஆணையைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது.

இந்த வாக்குகளை நானோ அல்லது விமல் வீரவன்ஸவோ, நிமால் சிறிபால டிசில்வாவோ அல்லது வேறு யாருமே பெற முடியாது.

வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரி வழிகாட்டலின் கீழ் போட்டியிடவுள்ளது.

எனினும் முன்னணியின் பெரும்பாலான கட்சிகள் அந்த முன்னணியில் போட்டியிட விரும்பவில்லை. எனவே நாம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கீழ் போட்டியிடவே விரும்புகிறோம்.

கட்சி பற்றிய முடிவு இன்னும் உறுதியாகவில்லை என்றாலும் அவரின் தலைமையின் கீழேயே பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட விரும்புகிறோம்” – என்றார்.

Related Posts