முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அன்றைய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவேண்டும் என்று கூறியே நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டேன்.
இத்தகைய நிலையில் எனக்கு மஹிந்த ராஜபக்ஷவினால் பணம் தரப்பட்டதாக டக்ளஸ் தேவானந்தாவால் கூறப்படுவதில் எந்தளவுக்கு உணமை உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும் இவ்வாறு வட மாகாண சபையின் உறுப்பினரும் குருநாகல் மாவட்ட சுயேச்சை வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ்ப்பபாணம் ஊடக மையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் இதன்போது அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில் –
பன்றிக்கு கனவிலும் மலம் உண்பது தான் எண்ணம் என்பதைப் போல டக்ளஸ் தேவானந்தாவுக்கு எப்போதும் பணத்தின் பால் தான் எண்ணங்கள் சிந்தனைகள் காணப்படுகின்றன. இந்த வகையில்தான் இன்று உண்மைக்குப் புறம்பாக நான் அரசாங்கத்திடம் இருந்து பணம் பெற்றுவருவதாகக் கூறுவதும் உள்ளது.
தமிழ் மக்களின் படுகொலைக்குக் காரணமாக இருந்தவர்களையும் காணால் போக காரணமாக இருந்தவர்களையும் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்பதில நான் தெளிவாக இருக்கின்றேன். கடந்த காலத்திலும் இதனையே நான் கூறிவந்துள்ளேன்.
இந்த வகையில் இன்றும் கூட குருநாகலையில் நான் சுயேச்சையாக தேர்தலில் போட்டியிடுவதும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் இல்லை. இன்றைய ஜனாதிபதியையும் மற்றும் முன்னாள் ஜனாதிபதியையும் எதிர்க்க வேண்டும் எனபதற்காகவே சுயேச்சையாக தேர்தலில் நிற்க்கிறேன்.
நான் எந்த சந்தர்ப்பத்திலும் மக்கள் மத்தியில் சென்று பிரச்சார நடவடிக்கைகளை மேற் கொள்ளப் போவதில்லை. இதனை வேட்பு மனுத்தாக்கல் செய்தவுடனேயே ஊடகங்களுக்கு தெளிவாக தெரிவித்துள்ளேன்.
எனக்கு கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பத்துக்கோடி ரூபா தருவதாக கூறி மூன்று கோடி ரூபா வழங்கப்பட்டதாகவும் பின்னர் தேர்தலில் குறிப்பிட்டளவு வாக்குகளை பெறாமையால் மிகுதி தொகை வழங்கப்படவில்லையெனவும் இன்றும் கூட கூறப்படுகின்றது ஏனைய உறுப்பிளர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பிலும் பார்க்க கூடியளவு பாதுகாப்பு சிவாஜிலங்கத்துக்கு வழங்க வேண்டும் என்று இன்று தேர்தல் ஆணையாளரிடம் கூறப்பட்டுள்ளது எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்புக் கூட கடந்த ஆண்டு அகற்றபபட்டுவிட்டது.
இன்று எனக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். எனக்கு எந்த வகையான பாதுகாப்பும் தேவை இல்லை ஏற்கப்போவதும் இல்லை. தன்னால் செய்யப்பட்ட பணிகளின் அடிப்படையில் தான் இன்று குருநாகலில் சிவாஜிலங்கம் தேர்தலில் போட்டியிடக் கூடியதாக உள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார் நான் இதற்கு முன்னரும் கூட பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.