Ad Widget

மஹிந்தவின் மீள் எழுச்சி எமக்கான எச்சரிக்கை : சிவமோகன்

மஹிந்தவின் மீள் எழுச்சி எவ்வாறான தாக்கங்களை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் நாம் அவதானமாகச் சிந்திக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற வவுனியா புளியங்குளம் பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இன்றைய அரசியலைப் பொறுத்தவரை நாம் ஒரு இக்கட்டான சூழ்நிலைக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். சிங்களப் பேரினவாதம் தமிழர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்று கொண்டிருக்கின்றது.

மீண்டும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீள் எழுச்சி பெறுகிறார். இம்முறை நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலின் மூலம் சிங்கள மக்கள் மத்தியிலான அவரது இனவாதக் கருத்துக்கள் அவரை வெற்றிப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளது. மஹிந்தவின் மீள் எழுச்சி எவ்வாறான தாக்கங்களை எமக்கு ஏற்படுத்தப் போகின்றது என்பது தொடர்பில் நாம் அவதானமாகச் சிந்திக்க வேண்டும்.

மேலும் தற்போதைய அரச தலைமைகளும் எங்களுக்கு உரிய முறையில் தீர்வுகள் எதனையும் பெற்றுத்தரக்கூடிய நிலைமையில் இல்லை. எனவே சிங்கள மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படுத்தப்படும் வரை தொடர்ந்துவரும் சிங்கள அரசுகள் தமிழர்களை ஏமாற்றி வருவது ஒரு வரலாறாகப் பதியப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Related Posts