Ad Widget

மல்லாவியிலும் மாணவி துஷ்பிரயோகம்

முல்லைத்தீவு மல்லாவிப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்விகற்று வருகின்ற மாணவியை, அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்ததாக குறித்த மாணவியால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி மாணவியை அச்சுறுத்தி கடந்த 04 மாதங்களாக ஆசிரியர் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கி வந்துள்ளார். இறுதியாக கடந்த ஞாயிற்றுக்கிழமையும் (26) மாணவிக்கு துன்புறுத்தல் கொடுத்த நிலையில், மாணவி எழுத்து மூலம் பாடசாலை ஆசிரியர் ஒருவர் ஊடாக அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

அதிபர் இந்த விடயத்தை வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவித்ததையடுத்து, வலயக் கல்விப் பணிமனையால் புதன்கிழமை (29) விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், ஆசிரியரை பாடசாலை வளாகத்தில் இயங்குகின்ற கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளரிடம் தொடர் கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டபோது,

‘பாதிக்கப்பட்ட குறித்த மாணவியால் பாடசாலை அதிபருக்கு எழுத்து மூலமாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டதையடுத்து, எனது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பில் மாகாண கல்வி அமைச்சுக்கு தெரியப்படுத்திய நிலையில் விசாரணைக்குழு ஒன்றினை அமைத்து உடனடியாக விசாரணை செய்ய பணிக்கப்பட்டிருந்தது. அதன்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு குறித்த ஆசிரியர் தற்காலிகமாக துணுக்காய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் இணைக்கப்பட்டுள்ளார்’ என்றார்.

கடந்த வாரங்களில் யாழ்ப்பாணத்தின் இரண்டு பாடசாலைகளில் மாணவிகள், அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர்களால் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த நிலையில், தற்போது, முல்லைத்தீவு மாவட்டத்திலும் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது சட்டரீதியாக பாரதூரமான குற்றமாகும். அதிலும், ஆசிரியர்களே மாணவிகள் மீது பாலியல் வதை புரிவது மேலும் மோசமான குற்றமாகும். எனவே, பாடசாலை மாணவிகள் மீது பாலியல் இம்சை புரியும் ஆசிரியர்கள் பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய செய்தி

பாலியல் வதை புரியும் ஆசிரியர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை – நீதிபதி இளஞ்செழியன் எச்சரிக்கை!

Related Posts