Ad Widget

மல்லாகத்தில் இளைஞர் குழுக்களிடையே முறுகல்! மோட்டார்சைக்கிளுக்கு தீ!! இருவர் கைது!!!

இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே நீண்ட நாட்களாக நிலவிய பகைமையால் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டுக் கொழுத்தப்பட்டது. இதையடுத்து குழு மோதல் ஒன்று ஏற்படவிருந்த நிலையில் தெல்லிப்பழைப் பொலிஸாரின் உடனடி நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மல்லாகத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:

மல்லாகம் – ஏழாலையில் இரு இளைஞர் குழுக்களிடையே நீண்டகாலமாக வாள்வெட்டு, மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் அண்மை நாட்களாக யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சம்பவங்களால் இரு குழுக்களும் அமைதி காத்து வந்தன.

இந்நிலையில் நேற்றைய தினம் தங்கள் பகுதியின் ஊடாக சென்ற பகைமை இளைஞர் குழுவைச் சேர்ந்த இருவர் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் கண்ட அப்பகுதி இளைஞர் குழு அவர்களை வாள்கள், பொல்லுகள் என ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிள்களில் துரத்திச் சென்றது.

தப்பி ஓடிய குழுவினர் ஒழுங்கை ஒன்றுக்குள் ஓடிய நிலையில் அந்த ஒழுங்கை வீடு ஒன்றுடன் முடிவடைந்த நிலையில் தப்ப வழியின்றி மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு தப்பிச் சென்றது. இதையடுத்து துரத்தி வந்த குழுவினர் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்தது.

இதில் சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமானது. சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதிக்கு தெல்லிப்பழை பொலிஸார் சென்ற நிலையில் குறித்த குழுவினர் தப்பிச் சென்றனர். எனினும் வீடு ஒன்றுக்குள் பதுங்கிய இருவரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் மயிலணிப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts