Ad Widget

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் வைத்தியசாலையில்!!

மருமகன் தாக்கியதில் படுகாயமடைந்த மாமியார் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அத்துடன், தாக்குதல் நடத்திய மருமகனையும் சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று காலை 9 மணியளவில் உடுவில் அம்பலவாணர் வீதியில் இடம்பெற்றது.

சம்பவத்தில் உடுவில் கடவுள் சந்திதியில் வசிக்கும் 74 வயதுடைய திருமதி ஐயாத்துரை என்ற வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

வயோதிபப் பெண்ணின் மகளின் கணவரே தாக்குதலை நடத்தியுள்ளார். அவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

“வயோதிபப் பெண்ணின் காணி ஒன்றை தமக்கு எழுதி வழங்குமாறு மருமகனான சந்தேகநபர் கேட்டுள்ளார். ஏற்கனவே சீதனமாக காணி ஒன்று வழங்கப்பட்டுள்ளதால், தன்னிடமுள்ள மற்றைய காணியை தனது மகனான சிறப்புத் தேவையுடையவருக்கு தேவை என்று மாமியார் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் காணியை எழுதி வழங்குமாறு மருமகன் இன்று மாமியாரைத் தாக்கியுள்ளார்” என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts