சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களை பெறுவதற்கு யாழ்.மாவட்ட மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
யாழ்.மாவட்டத்தில் உள்ளோர் சாரதி அனுமதி பத்திரம் பெறுவதற்கான மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியாது நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். அது தொடர்பில் பலராலும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
யாழ்.மாவட்டத்தில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கான இடம் ஒன்றே உள்ளது. மாவட்டத்தில் உள்ள சனத்தொகையின் அளவிற்கு அது போதாது உள்ளது. இதனால் பலரும் அதிகாலை 2 மணிக்கு முன்னேரே வந்து “டோக்கன்” பெறுகின்றார்கள். அதிலும் சில இடைத்தரகர்கள் “டோக்கனை” விற்பனை செய்தும் வருகின்றார்கள். இவை தொடர்பிலும் எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளிநொச்சி , வவுனியா மாவட்டங்களில் மருத்துவ சான்றிதழ் பெறுவதற்கு நெருக்கடிகள் இல்லை. ஆனால் இங்கு உள்ளது. அதற்காக அரச அதிகாரிகளையோ , வைத்தியர்களையோ குறை கூற மாட்டேன். சிஸ்டம் சரியில்லை. அதனை மாற்ற வேண்டும்.
இது தொடர்பில் உரிய தரப்பினர்களுடன் கதைத்து நெருக்கடியில்லாது இலகுவாக மருத்துவ சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள கூடியவாறான நிலைமையை விரைந்து ஏற்படுத்துவேன் என தெரிவித்தார்.