Ad Widget

மருதங்கேணி பிரதேச செயலக திறப்பு விழாவை கூட்டமைப்பு புறக்கணிப்பு

மருதங்கேணி பிரதேச செயலகத்தின் திறப்பு விழாவை வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

மருதங்கேணி (வடமராட்சி கிழக்கு) பிரதேச செயலக கட்டடத் திறப்பு விழா மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜீ.எஸ்.பலிகக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட நாடாளுமன்ற, மகாண சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொள்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை. பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் பூ.சஞ்சீவன் மட்டும் இதில் கலந்துகொண்டார்.

முதலமைச்சர் கலந்துகொள்ளாமைக்கான காரணத்தை அறிவதற்கு முதலமைச்சரை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பயனளிக்கவில்லை.

தங்களுடைய பெயர்கள் குறிப்பிடாமல் பொதுவாக நாடாளுமன்ற உறுப்பினர் எனக் குறிப்பிடப்பட்டிருந்தமையால் கலந்துகொள்ளவில்லையென கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறினர்.

நிகழ்வுக்கான அழைப்பிதழ் அச்சிடப்பட்ட பின்னர், உங்களையும் அழைத்துள்ளோம் வாருங்கள் என்று கூறியதாலேயே கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளதாக தெரியவருகின்றது.

Related Posts