Ad Widget

மரநடுகை மாதத் திட்டமாக மன்னாரில் பழமரத் தோட்டங்கள்

வடமாகாண மரநடுகை மாதத்தின் செயற்பாடுகளில் ஒன்றாக மன்னார் மாவட்டத்தில் பழமரத் தோட்டங்களை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்ச்சி மன்னார் தாமரைக்குளப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (30.11.2015) நடைபெற்றது. விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு பழமரக்கன்றுகளை வழங்கி வைத்ததோடு, அப்பகுதியில் புதிய முறையில் மாந்தோப்பு ஒன்றை உருவாக்குவதற்கு மாங்கன்றுகளை நடுகை செய்யும் பணியையும் தொடக்கி வைத்துள்ளார்.

குறைந்த இடைவெளிகளில் மாமரக்கன்றுகளை நாட்டி, குறைந்த உயரமுள்ள மரங்களாக அவற்றைப் பராமரித்துக் கைகளாலேயே பழங்களைப் பறிக்கும் அடர் மாமரச்செய்கை என்னும் புதியமுறை பல்வேறு நாடுகளிலும் அறிமுகமாகியுள்ளது. அதனை வடக்கில் அறிமுகம் செய்யும் நோக்குடன், மன்னாரில் 40 ஏக்கர் பரப்பளவில் நடுகை செய்வதற்கென 100 விவசாயிகளுக்கு 2478 மாமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும், 25 ஏக்கர் பரப்பளவில் நடுகை செய்வதற்கு 10,000 மாதுளம் கன்றுகளும், 1.5 ஏக்கர் பரப்பளவில் நடுகை செய்வதற்கு 750 கொய்யாக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

பிரதி விவசாயப்பணிப்பாளர் அஞ்சனாதேவி ஸ்ரீரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாகாண விவசாயப்பணிப்பாளர் சி.சிவகுமார், கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அ.செபமாலை ஆகியோரும், திட்டத்தின் பயனாளிகளான விவசாயிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

மரநடுகை மாதச் செயற்பாடுகளில் ஒன்றாக மன்னாரில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் பழமரத்தோட்டங்களை உருவாக்கும் திட்டம், வடக்கின் ஏனைய மாவட்டங்களிலும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்களின் உள்ளுர் நுகர்வும், ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mannar Tree Planting (1)

Mannar Tree Planting (3)

Mannar Tree Planting (4)

Mannar Tree Planting (5)

Mannar Tree Planting (7)

Mannar Tree Planting (10)

Mannar Tree Planting (11)

Mannar Tree Planting (12)

மேலும் படங்களுக்கு…

Related Posts