Ad Widget

மரத்திலிருந்து வீழ்ந்து இறந்த பனைத் தொழிலாளிகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூபா ஒரு இலட்சம்

தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (30.12.2015) பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்.

வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மாகாணசபை தோற்றம் பெற்ற 2013ஆம் ஆண்டில் இருந்து பனை, தென்னை மரங்களில் இருந்து வீழ்ந்து இறந்த குடும்பங்களுக்கு ஒரு இலட்சம் ரூபா வாழ்வாதார நிதியாக வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். அத்தோடு, அண்மையில் 2016 ஆம் ஆண்டுக்கான தனது அமைச்சுக்கான நிதிநிலை அறிக்கையைப் பேரவையில் சமர்ப்பித்து உரையாற்றியபோதும் இதனைத் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில், வடக்கு மாகாணத்தில் உள்ள பனை, தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விண்ணப்பங்கள் கோரப்பட்டு, ஆறு குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

வாழ்வாதார நிதி வழங்கும் நிகழ்ச்சியில் வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடக்கு மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன், அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், வடமாகாணசபை உறுப்பினர்கள், பிரதம செயலாளர் அ.பத்திநாதன், விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் திருமதி.மதுமதி வசந்தகுமார் ஆகியோரும் பனை தென்னை வளக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டிருந்தார்கள்.

Palmyra Donation (1)

Palmyra Donation (2)

Palmyra Donation (3)

Palmyra Donation (4)

Palmyra Donation (5)

Palmyra Donation (6)

Palmyra Donation (7)

Palmyra Donation (8)

Palmyra Donation (9)

Related Posts