Ad Widget

மரண வீட்டுக்குள் புகுந்து அட்டகாசம் செய்தோரில் நால்வர் கைது

கோண்டாவில் பகுதியில் மரண சடங்கு நடைபெற்ற வீட்டுக்குள் புகுந்து கடந்த புதன்கிழமை (18) தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற குற்றத்துக்காக கோண்டாவில் பகுதியை சேர்ந்த நான்கு பேரை நேற்று திங்கட்கிழமை (23) சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

கோண்டாவில் புகையிரத நிலையத்துக்கு அருகிலுள்ள வீடொன்றில் மரணச் சடங்கு இடம்பெற்று சடலத்தை தகனம் செய்யும் பொருட்டு இணுவில் காரைக்கால் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

மயானத்துக்கு செல்லும் வழியில் மதுபோதையில் நின்ற இளைஞர் குழு மரண ஊர்வலத்தில் வந்த மேளத்தை தமக்காக அடிக்குமாறு கூறினர்.

அதற்கு மேளம் அடிப்பவர்கள் மறுப்பு தெரிவிக்க, அந்தக் கும்பல் அவர்களுடன் வாய்த்தர்க்கம் செய்தது. அவ்வேளை மரணச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் மதுபோதையில் நின்றவர்களை அங்கிருந்து அடித்து விரட்டினர்.

அடிவாங்கி சென்ற கும்பல், மேலும் பலரை தம்முடன் இணைத்துக்கொண்டு வாள்கள், கம்பிகள் பொல்லுகளுடன் வந்து மயானத்தை சுற்றி வளைத்து தம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது தாக்குதலை நடத்த காத்திருந்தனர்.
அது தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு பொலிஸார் விரைந்தனர். பொலிஸாரை கண்ட அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. பொலிஸார் சென்றதும் மீண்டும் மரண சடங்கு இடம்பெற்ற வீட்டுக்கு வந்த கும்பல் அங்கிருந்தவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டனர்.

அந்த தாக்குதலில் வீட்டில் இருந்த பெண்ணொருவர் உட்பட இருவர் காயமடைந்தனர். வீட்டுக்கு முன்பாக நின்ற வான் ஒன்றின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி அட்டகாசம் செய்தனர். காயமடைந்த இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றனர்.

அயலவர்கள் ஒன்று கூடியதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அதில் ஒருவரை மாத்திரம் வாளுடன் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்தனர். அந்த சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது மேலும் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts