Ad Widget

மரங்கள் சாயும், மின் தடை ஏற்படலாம், குடிதண்ணீரை சேகரித்து வைக்கவேண்டும் – யாழ்ப்பாணம் மக்களுக்கு முன் எச்சரிக்கை

காலநிலை சீரின்மையால் யாழ்ப்பாணம் மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்ப்படுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு கோரியுள்ள மாவட்ட செயலர் க. மகேசன் , கோவிட் -19 நோய் தொடர்பிலும் மிகவும் அவதானமாக இருக்குமாறும் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களை சந்திந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

வங்காள விரிகுடாவில் மையம் கொண்ட புயல் இலங்கையில் முல்லைத்தீவுக்கு அண்மையாக நாட்டைக் கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது.

இந்த புயல் காரணமாக கடும் மழை பொழியும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் , கடும் காற்று வீசும். இந்த பாதிப்புக்கள் குடாநாட்டிற்கும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இடர் முகாமைத்துவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம்.

கடற்படை , இராணுவம் , பொலிஸார் மற்றும் இடர் முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு செயற்படுத்துகை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரம் கடமையில் இருந்து நிலமைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருப்பார்கள்.

இடர் முகாமைத்துவ பிரிவினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30ஆம் திகதி முதல் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம்.

அதேவேளை கடற்தொழிலாளர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக தரித்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தி உள்ளோம். தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவை ஏற்படின் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அவ்வாறாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 240 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கரையோர மக்கள் விழிப்பாக கால நிலைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தாழ் நில பகுதிகளில் வசிப்போர் விரும்பின் உறவினர்கள் , நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தற்காலிகமாக தங்க முடியும். அவ்வாறு தங்க வசதி இல்லாதோர் பொது கட்டடங்களில் தங்க முடியும்.

அதேவேளை இவ்வாறாக பொது இடங்களில் தங்க செல்வோர் தற்போதைய கோவிட் -19 நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார பிரிவினர் அவை தொடர்பில் கண்காணிப்பார்கள்.

அத்துடன் வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியேறும் போது அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் போய் தங்குமாறு கோருகின்றோம். அது அவர்களையும் பாதுகாக்கும் இந்த சமூகத்தையும் பாதுகாக்கும்.

பிரதேச செயலாளர்கள், கிராம சேவையாளர்கள் உள்ளிட்ட கள பணியாளர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு நாள்களும் நாங்கள் மிக அவதானமாக செயற்பட வேண்டும்.

ஆபத்தான மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். அதேவேளை மின்சார தடைகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அத்துடன் குடிதண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும்.

திடீர் வெள்ள பெருக்கு உள்ளிட்டவற்றுக்கு முகம் கொடுக்க அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாணம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் 200 மில்லி லீற்றர் மழை பெய்யும் என எதிர்பார்க்க படுகின்றது. நாளை மாலை வரை கால நிலை சீரின்மை இருக்கும். அதனால் மக்கள் இவற்றை கருத்தில் கொண்டு அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக கோவிட் -19 நோய் தொற்று தொடர்பில் மிக அவதானமாக இருக்க வேண்டும் என மக்களை கோருகின்றோம் – என்றார்.

Related Posts