Ad Widget

மன்னாரில் 3 கத்தோலிக்க சொரூபங்கள் மீது தாக்குதல்!

மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது நேற்று (புதன்கிழமை) அதிகாலை அடையாளந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது குறித்த சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடு உடைந்து சேதமாகியுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேநேரம் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளிலும் மேலும் மூன்று சிற்றாலயங்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts