Ad Widget

கடற்படையினர் மக்கள் இடையில் மோதல்!! பொது மக்களை நோக்கி துப்பாக்கிச் சூடு!!

மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு கிராமத்தில் நேற்றிரவு கடற்படையினருக்கும் கிராம மக்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடடன், பொது மக்களை நோக்கி கடற்படையினர் துப்பாக்கிச் சூடும் நடத்தியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

அரிப்பு கிராமத்தில் கடந்த சில தினங்களாக திருட்டுச்சம்பவங்கள் இடம் பெற்று வந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் அரிப்பு கிராமத்தில் உள்ள வீடு ஒன்றினுள் நபர் ஒருவர் நுழைய முற்பட்ட போது வீட்டில் உள்ளவர்கள் கண்டு சத்தமிட்டனர்.

இதன் போது குறித்த நபர் உடனடியாக அருகில் உள்ள பற்றைக்காட்டினுள் மறைந்திருந்த நிலையில் கிராம மக்கள் ஒன்றிணைந்து தேடி குறித்த நபரை பிடித்தனர். அப்போது அங்குள்ள கடற்படையினர் குறித்த நபரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர்.

இதனால் கிராம மக்களுக்கும் கடற்படைக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட போது கடற்படையினர் மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு மேற்கொண்டனர். பிடிக்கப்பட்ட குறித்த நபர் கடற்படை புலனாய்வுத்துறை என அரிப்பு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபரை மக்கள் பிடித்து தாக்கியுள்ள நிலையில் அரிப்பு ஆலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். இதையடுத்து பொலிசார் அங்கு விரைந்து சென்றனர். எனினும் குறித்த நபரை பொலிசாரிடம் ஒப்படைக்க முடியாது என்றும் மன்னார் நீதிவானிடம் நேரடியாக ஒப்படைக்க வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.

Related Posts