ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு இடையே சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் பேருந்தை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் நேற்று (4) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைதானது யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் இடையிலான சேவையை முன்னெடுக்கும் வழித்தடம் 777 இலக்க பேருந்தை செலுத்திச் சென்ற சாரதியே குறித்த சம்பவத்தின் போது கைதாகியுள்ளார்.
அதிகளவான பயணிகளுடன் நேற்று மாலை 4 மணியளவில் குறித்த அரச பேருந்து அதி வேகத்தில் பயணிப்பதை அவதானித்த ஊர்காவற்றுறை போக்குவரத்து பொறுப்பதிகாரி சமன் குமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் பேருந்தை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.
சோதனையின் போது சாரதியிடம் சாரதி அனுமதிப் பத்திரம் இருந்திருக்கவில்லை என தெரியவந்துள்ளது.
அந்த சந்தர்ப்பத்தில் அவர் மது அருந்தியிருந்ததாக கூறப்படுகின்றது.
இதனை அடுத்து சாரதியை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.
சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை மற்றும் மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட காரணங்களுக்காக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.