Ad Widget

கிராம சேவகர் மீது மதுபோதைக் கும்பல் தாக்குதல்!! நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது மக்கள் அதிருப்தி!!

தென்மராட்சிப் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கொடிகாமம் அல்லாரை J/322 கிராம சேவையாளர் ஒருவர் மதுபோதைக் கும்பலால் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி கிராம சேவையாளரைக் கடமை நேரத்தில் அவரைத் தாக்கியவர்கள் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட போதிலும் அவர்களை இதுவரை பொலிஸார் கைது செய்யவில்லை எனத் தெரியவருகின்றது.

அல்லாரையில் உள்ள வீடொன்றில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்பிய மதுபோதைக் கும்பல் ஒன்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டது.

இதனால் தங்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது என பிரதேச மக்கள் கிராம சேவையாளருக்குத் தெரியப்படுத்தினர்.

இந்நிலையில், அந்த வீட்டுக்குச் சென்ற கிராம சேவையாளர் வீட்டு உரிமையாளரை அழைத்து பாடல் சத்தத்தை குறைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்போது அவரும் அவரோடு சேர்ந்து மதுபோதையில் இருந்தவர்களும் கிராம சேவையாளரைக் கடுமையாகத் தாக்கினர் எனக் கூறப்படுகின்றது.

இதன்போது அவரது கைத்தொலைபேசியையும் பறித்து எறிந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட கிராம சேவையாளர் அது தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதும் பொலிஸார் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிராம சேவையாளர் ஒருவரை அவரது கடமை நேரத்தில் தாக்கியவர்களை கைது செய்யாத பொலிஸாரின் செயற்பாடு அப்பகுதி மக்களிடையேயும் தென்மராட்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts