பிறக்கின்ற புத்தாண்டின் வரவில் எமது மக்களின் வாழ்வு மேலும் சிறக்கின்ற புது வாழ்வாக பூக்கட்டும் என்றும், அதற்காக கனிந்திருக்கும் சூழலை சரியான திசை வழி நோக்கி நகர்த்தி செல்ல எமது மக்களுடன் இணைந்து தொடர்ந்தும் உறுதியுடன் உழைப்போம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
பிறந்துவரும் ஒவ்வொரு புத்தாண்டினையும், மனித குலம் நம்பிக்கையோடு வரவேற்று மகிழ்கிறது.
கடந்து வந்த இடர்களும், துயர்களும் விடுபட்டு, பிறந்துவரும் புத்தாண்டு புது வாழ்வையும், புது மகிழ்வையும் தரும் என்ற நம்பிக்கையே எங்கும் துளிர் விடுகிறது.
இந்த நம்பிக்கையோடும், விருப்பங்களோடுமே நாமும் எமது மக்களோடு இணைந்து, பிறந்து வரும் புத்தாண்டினை வரவேற்று மகிழ்கின்றோம்.
அச்சமற்ற சூழல், அடிமை இல்லாத வாழ்வு, வறுமையற்ற வாழ்வியல் எழுச்சி, எமது தேசத்தை தூக்கி நிறுத்தும் அபிவிருத்தி, அரசியல் உரிமை சுதந்திரம், எமது நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம் என எமது மக்கள் சகலதையும் தடையின்றி அனுபவிக்கும் சூழலை மேலும் நாம் வளர்த்தெடுப்போம்.
இவ்வாறு தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், மதிநுட்ப சிந்தனை வழி நின்று பிறந்திருக்கும் புத்தாண்டை எமது இலக்கு நோக்கி சரிவரப் பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளார்.