Ad Widget

மதகுருமார்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பிரித்தானிய உதவும்

இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மதகுருமார்களுக்கிடையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட பிரித்தானிய அரசாங்கம் மத்தியஸ்தம் வகிப்பது தொடர்பில் அரசுடன் கதைப்பதாக இலங்கை மாலைதீவு ஆகியவற்றுக்கான உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் தெரிவித்தார்.

பிரித்தானிய இலங்கை மாலைதீவுகளுக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் யாழ்ப்பாணத்துக்கு வெள்ளிக்கிழமை (29) விஜயம் செய்து நல்லைக் குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறுதிருமுருகன், மாற்றுக்கொள்கைகளுக்கான அமைப்பின் உறுப்பினர் கே.பரந்தாமன் ஆகியோருடன் யாழ். நல்லை ஆதீனத்தில் சந்திப்பொன்றை நிகழ்த்தினார்.

ஆட்சி மாறிய பின்னரும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்வு காணப்படவில்லையெனவும், 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்களுக்கு போதிய வேலைத்திட்டங்கள் அல்லது தீர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென குரு முதல்வர் எடுத்துக்கூறினார்.

உயர்பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பாடசாலைகள், கோவில்கள் உடைக்கப்படுகின்றமையும் சுட்டிக்காட்டினார்.

உண்மையான சமாதானம் நிலவவேண்டும் எனில் ஒரு இனத்தில் கைதிகளை மற்றைய இனம் விடுதலை செய்யவேண்டும். நீண்டகாலமாக விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என்பதை ஆதீன முதல்வர் வலியுறுத்தினார்.

இதன்போது, கருத்துத் தெரிவித்த உயர்ஸ்தானிகர் மதகுருமார்கள் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த நல்லை ஆதீன முதல்வர் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை பிரித்தானிய அரசு ஏற்பாடு செய்தால் அதனைச் செய்ய முடியும் என்றார்.

இது தொடர்பில் பிரித்தானிய அரசுடன் கலந்துரையாடிய பின்னர் கூறுவதாக அவர் கூறினார்.

Related Posts