Ad Widget

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் கைது!!

அரியாலை பகுதியில் தனது காணியினை சட்டவிரோதமான மணல் அகழ்விற்கு வழங்கிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் மணல் அகழ்வில் ஈடுபட்டோர் வாகனங்களைக் கைவிட்டு தப்பித்துவிட்டனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு இடம்பெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்ற போது, அங்கு மணல் அகழ்வில் ஈடுபட்டோர் தப்பி ஓடிவிட்டனர்.

அதனால் காணி உரிமையாளர் எனத் தெரிவிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் விசுவலிங்கம் கிருபாகரன் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

சம்பவ இடத்தில் ஜேசிபி வாகனம் மீட்கப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. புதையுண்ட நிலையிலும் சில்லுகள் காற்று போன நிலையிலும் உள்ள உழவு இயந்திரம் அந்தப் பகுதியில் உள்ளது. அத்துடன், சம்பவ இடத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள உழவு இயந்திரமும் மாநகர சபை உறுப்பினருடையது என கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தப்பிச்சென்ற ஏனையவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது”என்று யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட உறுப்பினர் விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டார்.

 

Related Posts