Ad Widget

மட்டக்களப்பில் கிறிஸ்தவ சபை பகுதியில் பதற்றம்!!!

மட்டக்களப்பு பார் வீதியில் உள்ள கிறிஸ்தவ சபை பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை ஏற்பட்ட பதற்ற நிலைமை பொலிஸாரினால் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

கிறிஸ்தவ சபையினர் தனது மகளை பார்க்கவிடாமல் ஐந்து வருடங்களாக உள்ளே வைத்துள்ளதாக தெரிவித்தும் தனது மகளை மீட்டுத்தருமாறு கோரியும் தாய் ஒருவர் குறித்த சபைக்கு முன்பாக போராட்டம் நடாத்தினார்.

இதன்போது குறித்த தாயை சபையின் பணியாளர்கள் உள்ளேவிட அனுமதிக்காத நிலையில் வெளியில் இருந்து தனது மகளை தன்னுடன் அனுப்பிவைக்குமாறு தாயார் போராட்டம் நடத்தியுள்ளார்.

தனது மகள் தன்னை ஐந்து வருடமாக பார்க்கவில்லையெனவும், தனது மகள் குறித்து முகநூல்களில் பிழையான விடயங்கள் பரப்பப்பட்டுவருவதாகவும் தனது மகளை மீட்கும் வரையில் போகமாட்டேன் எனவும் தாயார் போராட்டம் நடத்தினார்.

இதன்போது அப்பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி குறித்த தாய்க்கு ஆதரவாக பேசியதுடன் கிறிஸ்தவ சபைக்குள் சென்று சபை நிர்வாகத்துடன் வாக்குவாதங்களிலும் ஈடுபட்டனர்.

எனினும் குறித்த பெண்ணை அனுப்பமுடியாது என நிர்வாகம் தெரிவிக்க, இளைஞர்கள் சபைக்குள் புகுந்து குறித்த பெண்ணை மீட்க முனைந்தனர். இதன்போது அங்குசென்ற பொலிஸார் குறித்த இளைஞர்களை வெளியேற்றி நிலைமையினை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.

இதன்போது குறித்த தாயின் கோரிக்கை குறித்தும், அங்கு இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாகவும் மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்துடன், குறித்த தாய் மற்றும் மகளையும், சபையின் போதகரையும் பொலிஸார் விசாரணைகளுக்காக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசென்றுள்ளனர்.

இதேநேரம் குறித்த கிறிஸ்தவ சபை பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த தேவாலயம் தொடர்பாக அண்மைக்காலமாக பல்வேறு கருத்துக்களும் காணொளி பதிவுகளும் முகநூல் ஊடாக வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts