Ad Widget

மடுத்திருத்தலத்தின் ஆவணி திருவிழா மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக இடம்பெற்றது

மன்னார் மடு அன்னையின் வருடாந்த ஆவணித் திருவிழா திருப்பலி நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.

திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் சிலாபம் மறைமாவட்ட ஆயர் மேதகு அருட்கலாநிதி வலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை மற்றும் குருக்கள் இணைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

மடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை கொண்டாடும் வகையில் கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றம் செய்யப்பட்டது.

மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.ஜே.பெப்பி சோசை அடிகளார் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

மாலையிலே திருச்செபமாலை,மறையுரைகள்,நற்கருணை ஆசீர் என்பன இடம்பெற்றன.

நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெஸ்பர் ஆராதனை இடம்பெற்று¸ நற்கருணை ஆசீர்வாதம் வழங்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6.15 மணிக்கு ஆயர்கள் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக் கொடுத்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்றதோடு,மடு அன்னையின் ஆசி வழங்கப்பட்டது.

நாட்டில் கொரோனா தற்போது தீவிரமடைந்து வரும் நிலையில் மடு திருத்தலத்திற்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்கதர்களின் வருகை நிறுத்தப்பட்டுள்ளது.

கொவிட் தொற்று நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கத்தின் சுகாதார வழிமுறைகள்¸ கட்டுப்பாடுகளுக்கு அமைவாக திருவிழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மேலும் மூன்று திருப்பலிகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts