மக்கள் அச்சமின்றியும் பாதுகாப்பாகவும் வாக்குச் சாவடிக்கு செல்வதை உறுதிப்படுத்துமாறும், அரச ஊடகங்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு சார்பாக செயற்படுவதை நிறுத்துமாறும் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்ற பிரசார நடவடிக்கைகளின்போது பல வன்முறைச் சம்பவங்களும், மிரட்டல்களும் இடம்பெற்றன என இலங்கையை சேர்ந்த கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்தன.
வாக்காளர்கள், வேட்பாளர்கள், கண்காணிப்பாளர்கள், தாக்கப்படுதல், மிரட்டப்படுதல் போன்றவற்றை தடுப்பதற்காக இலங்கை அதிகாரிகள் சகல விதமான நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியாவிற்கான இயக்குநர் பிரட் அடம்ஸ் வேண்டுகோள் விடுத்தார்.
தேர்தல் பிரசார காலத்தின்போது இடம்பெற்ற சம்பவங்கள் வாக்களிப்பு தினத்தன்று இடம்பெறுவதையும், வாக்கு எண்ணும் பணி பாதிக்கப்படுவதையும் அனுமதிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னர் வன்முறைகள் இடம்பெறலாம் எனவே பொலிஸாரும் ஏனையவர்களும் பக்கச்சார்பற்ற விதத்தில் நடந்து மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதை தேர்தல் ஆணையகமும் ஏனைய தரப்புகளும் உறுதி செய்யவேண்டும்.
குறிப்பாக சிறுபான்மையினர் வாழும் பகுதிகளில் இதனை செய்யவேண்டும். தேர்தலுக்குப் பின்னர் இராணுவத்தினர் ஆற்றும் பங்களிப்பு இலங்கையில் எதிர்கால மனித உரிமைகள் நிலவரம் எவ்வாறு அமையும் என்பதை தெரிவிப்பதாக அமையும். என அடம்ஸ் தெரிவித்தார்.