Ad Widget

மக்களை அணிதிரட்டி நீதிக்கும் விடுதலைக்குமான ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே நாம் அவதானிக்கின்றோம்!- நாடு கடந்த தமிழீழ அரசு

இனஅழிப்புக்கான பரிகாரநீதித் தேடலிலும், தாயகம் தேசியம் தன்னாட்சியுரிமை எனும் ஈழத்தமிழ் மக்களுடைய அரசியல் விருப்பினை வென்றெடுப்பதற்கும், சனநாயக வழிமுறையில் மக்களை அணிதிரட்டி, ஒருமித்த கருத்துருவாக்கத்தினை ஏற்படுத்துகின்ற செயற்பாடாகவே, தமிழ் மக்கள் பேரவையின் தோற்றத்தினை அவதானிப்பதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

suthan-raj-tamil-elaam

சிறிலங்காவின் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களது இணைத்தலைமையில் தோற்றம் பெற்றுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் பொழுதே அமைச்சர் சுதன்ராஜ் இதனைச் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், விடுதலைக்காக போராடுகின்ற ஓர் இனத்தின் மத்தியில், வாக்கு வேட்டை தேர்தல் அரசியலுக்கு அப்பால், மக்கள் தளத்தில் மக்களை அணிதிரட்டுகின்ற மக்கள் இயக்கங்களின் செயற்பாடுகளே பிரதானமானது.

இந்நிலையில், இலங்கைத்தீவில் தற்போது ஒப்பீட்டளவில் கிடைத்துள்ள சனநாயக வெளியில், எமக்கான நீதிக்கும் விடுதலைக்குமான பன்முகச் செயற்பாடுகளை புறந்தள்ளிவிட முடியாது.

இதேவேளை தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலவீனப்படுத்துமா அல்லது பலப்படுத்துமா என சுருக்கிவிடாது, தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எவ்வகையில் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையிலேயே சிந்திக்க வேண்டியுள்ளது.

மக்கள் சார்பான ஜனநாயக செயற்பாடுகளை வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் இவ்விவகாரம் தொடர்பில் கூறியிருந்த கூற்று, சிறிலங்கா அரசாங்கத்துடனான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைகளுக்கான பேரம்பேசும் சக்தியினை, தமிழ் மக்கள் பேரவையின் அழுத்தம் ஏற்படுதும் என நம்பலாம் அமைச்சர் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Posts