Ad Widget

மக்களுக்கு விமோசனத்தை பெற்றுக்கொடுக்க தொடர்ந்தும் உறுதியுடன் உழையுங்கள் : டக்ளஸ் தேவானந்தா

நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றங்களில் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வடக்கு கிழக்கு மாகாணங்களில் 38 சபைகளில் போட்டியிட்டு 98 ஆசனங்களை பெற்று எமது அரசியல் பலத்தை இதர தமிழ் அரசியல் தரப்பினருக்கும் தென்னிலங்கைக்கும் மக்கள் எம்மீது வைத்துள்ள உறுதிப்பாட்டின் வலிமையை வெளிப்படுத்திக் காட்டியுள்து என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட 98 உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நாம் எதிர்பார்த்த வெற்றி எமக்கு கிடைக்காவிட்டாலும், வடக்குக் கிழக்கில் 98 உறுப்பினர்களை நேரடியாகவும், விகிதாசாரப் பட்டியல் ஊடாகவும் வென்றெடுத்துள்ளோம் என்பதுடன் எமது வாக்குகளும் அதிகரித்துள்ளன.

குறிப்பிடத்தக்க இந்த வெற்றிக்காக உழைத்த தோழர்கள், வேட்பாளர்கள், கட்சியின் அபிமானிகள் அனைவருக்கும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அத்துடன் கட்சியின் வெற்றிக்காவும், வளர்ச்சிக்காகவும் நீங்கள் அனைவரும் அர்ப்பணிப்போடும், ஒற்றுமையோடும் செயற்படவேண்டும். நாம்பெற்றுக்கொண்ட வெற்றியும், நமது உழைப்பும் எமது மக்களுக்கு பலாபலன்களையும் விமோசனத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கானதாக அமைய நாம் உறுதியுடன் செயற்பட வேண்டும்.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த தேர்தல் வெற்றியானது ஈ.பி.டி.பி கட்சியை அனைவரும் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts