Ad Widget

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முயல்வேன்!! குடிநீர் பிரச்சினை குறித்தும் அவதானம் செலுத்துவேன் – வடக்கு ஆளுநர்

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத்தர முயல்வேன் என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்தார்.

இன்றைய தினம் (22) உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இன்று என்னை வாழ்த்துவதற்கு வருகைதந்த மத குருமார் சில கோரிக்கைகளை முன்வைத்திருந்தார்கள். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி, அதற்கு தீர்வு பெற்றுத் தருமாறு கூறியிருக்கின்றார்கள். எனவே, அந்த விடயத்தினை நான் சரியான முறையில் அணுகி, அதற்கு தீர்வுகளை பெற்றுத் தருவதற்கு முயற்சிப்பேன்.

இந்த மாகாணத்தில் இருக்கின்ற அனைத்து மதங்களும் தங்களுடைய தனித்துவமான மத அனுஷ்டானங்களை மேற்கொள்வதற்குமான உரிமைகளை வழங்க வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.

அந்த வகையில், அதற்கான சகல ஏற்பாடுகளையும் எடுக்க நான் முயற்சிக்கின்றேன்.

அதேபோல அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம் அவர்களால் மாகாண மக்களின் குறிப்பாக, யாழ். மாவட்ட மக்களின் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக எடுத்துக்கூறியிருந்தார்.

ஏற்கனவே, பாலியாறு சம்பந்தமான ஒரு பிரேரணையை தாங்கள் தயாரித்து வைத்திருப்பதாகவும், அதை முன்னெடுத்து செல்லும்படியும் கூறியிருக்கிறார். அது தொடர்பாகவும் நான் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு தயாராக உள்ளேன்.

யாழ்ப்பாண மக்களுக்கு நீண்ட காலமாக இருக்கின்ற குடிநீர் பிரச்சினையை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் கூட இங்கு வருகின்றபோது குடிநீர் பிரச்சினையை தனிப்பட்ட ரீதியில் ஒரு பெரும் பிரச்சினையாக உணர்ந்திருக்கின்றேன். எனவே, அந்த பிரச்சினையை தீர்க்க நிச்சயமாக முக்கிய கவனம் எடுப்பேன் எனவும் தெரிவித்தார்.

Related Posts