Ad Widget

போதையை தரும் வலி நிவாரணி மாத்திரைகளை மருத்துவர்களும் விற்பதாக குற்றச்சாட்டு!

மருத்துவ சிட்டை இல்லாவிடின் 25 ரூபாய் வலி நிவாரணி மாத்திரைகளை 250 ரூபாய்க்கு சில மருந்தகங்களில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

சில வலி நிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்ளும் போது, அவை போதையை தர கூடியவை.

அவ்வாறான மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை இன்றி உட்கொள்வது உயிராபத்தை ஏற்படுத்த கூடியது.

அதனால் அந்த மாத்திரைகளை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இன்றி மருந்தகங்களில் விற்பனை செய்வது சட்டவிரோதமானதாகும்.

இவ்வாறான நிலையில் வடக்கில் உள்ள சில மருந்தகங்களில் 25 ரூபாய் பெறுமதியான குறித்த வலி நிவாரணி மாத்திரையை மருத்துவர்களின் பரிந்துரை சிட்டை இல்லாமல் வழங்குவதாயின் அதனை 250 ரூபாய்க்கும் அதிகமாக விற்பனை செய்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை மருத்துவர்கள் சிலரும் இந்த மாத்திரைகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள மருத்து மொத்த விற்பனை நிலையத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மருத்துவர் மற்றும் வவுனியாவை சேர்ந்த மருத்துவர் ஆகிய இருவரும் பெருந்தொகையாக வலி.நிவாரணி மாத்திரைகளை கொள்வனவு செய்திருந்தமை தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts