Ad Widget

போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து காவலாளியை வாளால் வெட்ட முயன்ற சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது!!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைய முயற்சித்ததுடன், கடமையில் ஈடுபட்டிருந்த காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோயாளர் பார்வை நேரம் முடிந்த பின் தந்தையை பார்வையிட அனுமதிக்கவில்லை என்ற காரணத்துக்காகவே இந்த வன்முறை இடம்பெற்றதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையின் பிணவறை பக்கம் உள்ள நுழைவாயிலுக்கு அருகில் பட்டா வாகனத்தில் வந்த சிலர் கதவால் ஏறி குதித்து வைத்தியசாலைக்குள் நுழைய முற்சித்துள்ளனர்.

இதனை அவதானித்த வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை தடுக்க முயன்றபோது வைத்தியசாலை மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.அவர்கள் வந்த பட்டா வாகனத்திலிருந்து வாளை எடுத்து பாதுகாப்பு உத்தியோகத்தர் மீது வெட்ட முயற்சித்ததுள்ளனர்.

இதனையடுத்து சுதாகரித்துக் கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் அவர்களை தடுக்க முயன்றுள்ளார். அங்கிருந்த கதிரை, மேசை போன்றவற்றை வாளால் வெட்டி சேதப்படுத்திய வன்முறை கும்பல் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.துரித விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் ஒருவரை நேற்று கைது செய்தனர்.

ஏழாலையைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டார். ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்.

Related Posts