Ad Widget

பொலிஸார் என அடையாளப்படுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரிப்பு

meeting_jaffna_police_jeffreeyயாழ்.குடாநாட்டில் பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நபர்கள் வர்த்தகர்களையும் பொதுமக்களையும் அச்சுறுத்தி கப்பம் பெறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி, இவ்வாறு அச்சுறுத்தல் விடுவோர் தொடர்பில் உடனடியாகவே தங்களுக்கு அறியத்தருமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.

இவ்வாறு கப்பம் பெறும் மோசடிக் கும்பலை மடக்கிப் பிடிப்பதற்கு இரண்டு கட்டங்களாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றுக் யாழ்.பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பொலிஸ் அத்தியட்சகர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

இச் சந்திப்பில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள், அண்மையில் யாழில் இடம்பெற்ற கப்பம் கோரல் ஒன்று தொடர்பாக பொலிஸ் நிலையத்தில செய்யப்பட்ட முறைப்பாட்டின் விசாரணைகள் எந்தக் கட்டத்தில் உள்ளன என்று கேள்வியெழுப்பினர்.

அதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரிடம் யாழ்.பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் கையடக்கத் தொலைபேசியூடாக பேசிய ஒருவர் தனக்கு 5 ஆயிரம் ரூபா கப்பம தரவேண்டும் என்றும் மறுத்தால் வவுனியாவில் உள்ள புலனாய்வுப் பிரிவு நிலையத்திற்கு விசாரணைக்காக வரவேண்டும் என்றும் அச்சுறுத்தியிருந்தார்.

இதனால் அஞ்சிய வர்த்தகர் அவர் கேட்ட 5 ஆயிரம் ரூபாவினை யாழ்ப்பாணத்தில் உள்ள பூட்சிற்றி ஒன்றில் ஈ-சற் மூலம் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அதே வர்த்தகரிடம் மீண்டும் 10 ஆயிரம் ரூபா தருமாறு அதே நபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆயினும், பணத்தினைக் கொடுக்க மறுத்த வர்தகர் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இது தொடர்பான விசாரணை எந்தக் கட்டத்தில் உள்ளது என்று ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த யாழ்.பிராந்திய சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் மொகமட் ஜெப்ரி மேற்படி முறைப்பாடு நேற்று மீண்டும் எனக்குக் கிடைத்துள்ளது.

ஏற்கனவே செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. எனக்குக் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆயினும், பொலிஸார் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் அநாமதேய நபர்களாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இது தொடர்பாக புலனாய்வு ரீதியில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பம் பெற்ற சம்பவத்தில் சம்மந்தப்பட்டதாக கூறப்படும் பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்பிலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

வாரந்த ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் மொஹமட் ஜெப்ரி அவர்கள் கூறிய ஏனைய செய்திகள்

யாழில். சிறுகுற்றம் புரிந்த 189பேர் கைது

வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் இளைஞன் பொலிஸாரால் கைது

பிள்ளைகளை தனியே வீட்டில் விட்டுச்செல்வதை தவிர்க்கவும்: பொலிஸ்

Related Posts