Ad Widget

பொலிஸாரின் செயற்பாடு குறித்து கண்ணீருடன் மனித உரிமை ஆணைக்குழுவில் மாற்றுத்திறனாளி முறைப்பாடு

மாற்றுத்திறனாளி ஒருவரின் வீட்டுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற காங்கேசன்துறை பொலிஸார், அவர் மீது கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில்நேற்று (திங்கட்கிழமை) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை பகுதியில் கடந்த வாரம் இரு குடும்பங்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் சம்பவம் தொடர்பில் காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலுக்கமைய அவ்விடத்திற்கு சென்ற அவர்கள் மீதும் வாள்வெட்டு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர். அத்துடன் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் கீரிமலையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

எனினும் அவ்வாறு கைது செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி சந்தேகநபர் குறித்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அத்துடன் பொலிஸார் தம்மை கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதாக பொலிஸாருக்கு எதிராக இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

இவ்வாறு முறைப்பாட்டினை பதிவு செய்தவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “கீரிமலை பகுதியில் நான் வசித்து வருகின்றேன். கடந்த வாரம் எனது வீட்டிற்கு அருகில் இருக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மோதல் நடைபெற்ற வீடு என்னுடைய வீடுதான் என நினைத்து வந்த பொலிஸார், பூட்டியிருந்த எனது வீட்டின் படலையை உடைத்து உள்ளே வர முயற்சி செய்தனர். அப்போது அங்கு நின்ற பொலிஸார் ஒருவருக்கு எனது வீட்டின் படலையில் இருந்த தகரம் கையில் வெட்டியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பொலிஸார் வீட்டிற்குள் நுழைந்து என்னை கடுமையாக தாக்கினர்.அங்கவீனம் உற்ற என்னை கட்டை ஒன்றினால் அடித்து துன்புறுத்தினார்.

அப்போது எமது வீட்டில் மோதல் இடம்பெறவில்லை. அயல் வீட்டிலேயே மோதல் இடம்பெற்றது என கூறினேன். அதனையும் கேட்காத பொலிஸார் என்னை தடிகளாலும் கொட்டன்களினாலும் தாக்கினார்கள். அதனைத் தொடர்ந்து உடனடியாக என்னை கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் மறுநாளே நான் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.

பொலிஸாரின் தாக்குதலினால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஐந்து நாட்கள் நான் அனுமதிக்கப்பட்டிருந்தேன். பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளேன்” என்றார்.

Related Posts