வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையிலேயே அமைக்கவேண்டுமென்பதை வலியுறுத்தி இன்று முதல் தாமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (வயது 73) என்பவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளார்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இந்த தகவலை பாராளுமன்றத்தில் நேற்று நிதி முகாமைத்துவம் (பொறுப்பு திருத்தச்) சட்டமுலத்தின் இராண்டாம் மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் வெளியிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதாக கூறப்பட்டே அரசாங்கத்தினால் வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிலையம் வவுனியா மாவட்டத்தில் அமைக்கப்படவேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரையில் இந்தப் பிரச்சினை முடிவதாக இல்லை.
தற்போது மாங்குளத்தில் ஒன்றும், மன்னார் மாவட்டத்திற்கு ஒன்றுமாக இரண்டு பொருளாதார மத்திய நிலையங்கள் அமைக்கப்படுவதாக கூறப்படுகின்றது. உண்மையிலேயே வடமாகாணத்திற்கான பொருளதார நிலையம் என்றால் எவ்வாறு கூறுபோட்டு இரண்டாக அமைக்கமுடியும். ஆகவே மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கான பொருளாதார மத்திய நிலையமா அல்லது வடமாகாணத்திற்கான பொருளதார நிலையமா என்பது தொடர்பில் தெளிவற்ற தன்மையொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் உள்ள அரச வீட்டுத்திட்ட பகுதிக்கு அண்மையில் அமைப்பதென வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு இவ்விடத்தில் அமைப்பது தொடர்பாக ஆராய்ந்த நிபுணர்குழு பூரண அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளது.
மேலும் வடக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகளிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பிலும் இவ்விடத்தில் அமைப்பதற்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே இரண்டு இடங்களில் அமைப்பதற்குரிய தீர்மானத்தை அரசாங்கம் எடுத்துள்ளது. இதனை எவ்வாறு ஏற்றுக்கொள்ளமுடியும்?
வடமாகாணத்திற்கான பொருளாதார நிலையத்தை அமைப்பது குறித்து அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்கவேண்டும். பெரும்பான்மை கருத்துக்கும் தீர்மானத்திற்கும் மதிப்பளிக்கவேண்டும். அதனைவிடுத்து ஏதேச்சதிகாரமாக சில நபர்களின் நலன்களை திருப்பதிப்படுத்தும் வகையில் தீர்மானங்களை எடுக்க கூடாது.
இவ்வாறிருக்கையில் வடமாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலேயே அமையவேண்டும் என்பதை வலியுறுத்தி நாளையதினம் முதல்(இன்று) தமோதரம்பிள்ளை மகேஸ்வரன் (வயது 73) எனும் முதியவர் சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தை மேற்கொள்வுள்ளார். ஆகவே பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் உகந்த இடத்திலேயே இந்த மத்திய நிலையம் அமையவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டு உரிய தீர்மானத்தை அரசாங்கம் எடுக்கவேண்டியது அவசியமாகும் என்றார்.