ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முதலமைச்சர் விக்கினேஸ்வரனை சிபாரிசு செய்துள்ளமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் தமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதிகாரப் பகிர்வின் மூலமாக நாட்டை ஒற்றுமைப்படுத்த இவரின் தெரிவு சிறந்ததொன்றாக அமையும் எனவும் சுட்டிக்காட்டினார்.
அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்தும் அமைப்பினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டி ருந்த
செய்தியாளர் சந்திப்பின் போதே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எதிர்க்கட்சி கோரினால் பொதுத்தேர்தலை நடத்தத் தயார் என அரசாங்கம் குறிப்பிட்டது.இப்போது அதையே
எதிர்க்கட்சிகளும்வெளிப்படையாகவே கோரிவருகின்றன. எனவே, அரசாங்கம் இப்போது வாய்மூடி மௌனியாக இருக்காது பொதுத்தேர்தலை
நடத்த வேண்டும்.
அதேபோல் கடந்த வாரம் ராவய பத்திரிக்கையில் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் பொது வேட்பாளராக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனை நியமிக்க வேண்டும் என்ற கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கருத்து தொடர்பில் பிரதான எதிர்க்கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, மற்றும் ஜனநாயகக் கட்சிகள் ஆகியன தமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் இன்னமும் தமக்கென பொது வேட்பாளர் ஒருவரை தேடிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனின் பெயரினை சிபாரிசு செய்திருப்பதானது சிறந்ததொரு விடயமாகும். இது எமது தனிப்பட்ட கருத்தோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தோ அல்ல. இது சிங்கள பத்திரிக்கையொன்றின் பொதுவான கருத்தேயாகும். அத்தோடு விக்கினேஸ்வரன் அவர்கள் வடக்கில் மிகப்பெரியதொரு வெற்றியுடன், அனைத்து மக்களினதும் விருப்பில் தெரிவு செய்யப்பட்டவர் ஆவார்.
அத்தோடு நீதியரசராக செயற்பட்ட கால கட்டங்களில் நாட்டிற்கு உண்மையாகவும், எந்தவித குற்றச்சாட்டுக்குமின்றி சேவையாற்றிய ஒருவர். ஆகவே தான் அவரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. எனவே, இதனை சாதாரணமானதொரு விடயமாகக் கருத்தில்கொள்ளாது எதிர்க்கட்சிகள் இவ்விடயம் தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.
அதேபோல் இவர் பொது வேட்பாளராக நியமிக்க தகுதி இல்லையென்றால் அதற்கான காரணம் என்னவென்பதனையும் தெரிவிக்க வேண்டும். அதிகாரப் பகிர்வின் மூலமாக நாட்டை ஒற்றுமைப்படுத்த இவ்வாறான ஒருவரே சிறந்த தெரிவாக இருக்கும் என்று கருதுகின்றனர். ஆகவேதான் இவரை சிபாரிசு செய்ய முன்வந்துள்ளனர்.
எந்தத் தேர்தர்தல் இடம்பெற்றாலும் மக்கள் தமது வாக்குப் பதிவினை மேற்கொள்ள வேண்டியது அவர்களின் கடமையாகும். எனவே வடக்கில் இருந்து வெளியே வாழும் தமிழ் மக்கள் தமது வாக்காளர் இடாப்புப் பதிவுகளை செய்து கொள்ள வேண்டும். இதனை ஒரு முக்கிய பொறுப்பாக தமிழ் மக்கள் மேற்கொள்ள வேண்டும். தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.