இலங்கையில் பொதுநலவாய மாநாடு நடத்தவுள்ளதை தமது கூட்டமைப்பு எதிர்ப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.எ.சுமந்திரன் கூறியுள்ளார்.
‘இலங்கை அரசாங்கம் பொதுநலவாயத்தின் நியமங்களை மீறியுள்ளது. அதனால்தான் நாம் இதை எதிர்க்கின்றோம். பொதுநலவாயத்தின் அடிப்படை கோட்பாடுகளை அரசாங்கம் மீறியதற்கு பிரதம நீதியரசரை பதவி நீக்கியமை ஒரு நல்ல உதாரணமாகும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நிருபர்களிடையே பேசியபோது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பொதுநலவாய மாநாட்டில் பங்குபற்றுவதில்லையென கனடா எடுத்துள்ள முடிவை பாராட்டிய அவர் இந்திய அரசாங்கம் இந்த முன்மாதிரியை பின்பற்ற வேண்டும் என சுமந்திரன் கூறினார்.
மாநாட்டில் பங்குபற்றாமல் விடுவதற்கு கனடா கூறியுள்ள காரணங்களை ஆராய்ந்து இந்தியா அதன்படி ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமென அவர் மேலும் கூறினார்.