Ad Widget

பொதுசுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது – அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம்

GMOAவடமாகாண பொதுசுகாதார பரிசோதகர்களின் பணிப்புறக்கணிப்பானது 45 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்த பணிப்புறக்கணிப்பு நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத சுகாதார திணைக்களத்தின் கட்டமைப்புக்களை குழப்புகின்ற நிபந்தனைகளை முன்வைத்து நடைபெறுகிறது. இதனால் சுகாதார திணைக்களத்தின் பணிகளான தொற்று நோய் தடுப்பு, கொல்கள பரிசோதனைகள் என்பன பாதிப்படைந்துள்ளதுடன் இதனால் பிரதேச மக்கள் பெரும் இன்னல்களை எதிர்நோக்குகின்றனர்’ என அரச மருத்தவ அதிகாரிகளின் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வேலை நிறுத்தப்போராட்டம் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக பொதுசுகாதார பரிசோதகர்கள் பல தடவைகள் வைத்தியர் சங்கத்தினாலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினராலும் சுகாதார அமைச்சரினாலும் அழைக்கப்பட்டிருந்த போதிலும் அவர்கள் கூட்டங்களிற்குச் சமூகமளிக்காமையானது வருந்தத்தக்க விடயமாகும்.

தொற்றுநோய் தடுப்பு சம்பந்தமாக விசேடமாக டெங்கு சம்பந்தமான நடவடிக்கைகள் கட்டாயமாக செய்யப்படவேண்டிய கடமைகளில் சட்டமாக்கப்பட்ட போதிலும் வடமாகாண பொதுசுகாதார பரிசோதகர்கள் இந்த கடமைகளை கூட செய்வதில்லை. இவர்களது தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் பொதுமக்கள் பெரும் ஆபத்துக்குள்ளாகி உள்ளாகி இருப்பதுடன் பிரதேசத்தின் பல்வேறு சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளும் முடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களது வேலைநிறுத்தப் போராட்டம் சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் ஒன்று புதன்கிழமை(23) அரச மருத்துவ சங்கத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதன்போது பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டு அதன் பின்னரான சுகாதார அமைச்சருடான சந்திப்பின் போது தெரியப்படுத்தப்பட்டது.

டெங்கு சம்பந்தமான நடவடிக்கைகளை சரிவர செய்வதற்கு அதற்காக உருவாக்கப்பட்ட சுற்றாடல் பொலிஸின் உதவியை நாடுவது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பிரதி பொலிஸ்மா அதிபர் காமினி நவரத்தினவுடன் கலந்துரையாடி நடைமுறைபடுத்தலாம் என கலந்தாலோசிக்கப்பட்டது.

கொல்கள பரிசோதனைகள் தற்போது நடத்தப்படுவதில்லை என்பதால் சில இடங்களில் கொல்களங்கள் செயற்படுத்துவதில்லை. மற்றும் சில இடங்களில் பரிசோதனை செய்யப்படாமல் செயற்படுகின்றன. இதனால் மக்கள் சுகாதாரமற்ற இறைச்சிகளை நுகர்ந்து நோய்வாய்பட வாய்ப்புள்ளது. இதற்கான மாற்று ஏற்பாடாக அரச கால்நடை மருத்துவர் சங்கத்துடன் கலந்துரையாடி அவர்களின் உதவியை நாடுவது என முடிவெடுக்கப்பட்டது.

இவ்வாறான பிரச்சனைகளுக்கு மாற்றுவழிகள் மூலம் தீர்வு கண்டு மக்கள் பாதிப்படைவதை தடுப்பது தமது சங்கத்தின் கடைப்பாடு. நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத சுகாதார திணைக்களத்தின் கட்டமைப்புக்களை குழப்புகின்ற நிபந்தனைகளை முன்வைத்து நடைபெறும் பணிப்புறக்கணிப்பை விரைவாக முடிவுக்கு கொண்டுவர திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts