Ad Widget

‘பைரவா’ மீண்டும் ஒரு ‘கோட்’ சர்ச்சை

‘கபாலி’ படத்தில் ஏறக்குறைய படம் முழுவதுமே ரஜினிகாந்த் ‘கோட்’ அணிந்தே நடித்திருப்பார். அந்த ‘கோட்’ அணிதலுக்கான காரணமும் படத்தில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருந்தாலும் அந்த ‘கோட்’ விவகாரத்தையே சர்ச்சையாக்கி சமூக வலைத்தளங்களில் பலர் குளிர் காய்ந்தனர். ‘கபாலி’ படம் தற்போது ஓடி முடித்துள்ள நிலையிலும் அந்த ‘கோட்’ விவகாரம் அடிக்கடி எழுந்து கொண்டுதான் இருக்கிறது.

vijay

அந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் அடுத்து இன்னொரு சர்ச்சையை ஆரம்பித்துவிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்ட விஜய் படமான ‘பைரவா’ படத்தின் முதல் போஸ்டர் மீண்டும் அந்த ‘கோட்’ சர்ச்சையை ஆரம்பித்து வைத்துள்ளது. அந்த முதல் போஸ்டரில் விஜய் ‘கோட்’ அணிந்து கொண்டு, போஸ் கொடுத்திருந்தார். இப்போது அதைத்தான் சமூக வலைத்தளங்களில் கையில் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.

மக்களிடம் அதிக செல்வாக்கைப் பெற நினைக்கும் ஹீரோக்கள் தங்களை ஏழை மக்களின் தலைவனாகவே காட்டிக் கொள்ள முயற்சிப்பார்கள். ஆனால், மழை, வெள்ளம் வந்தால் சில பல ஆயிரங்களைக் கூட அளிக்க மாட்டார்கள். இருந்தாலும் திரையில் மட்டும் ஏழை மக்களைக் காப்பவர்களாகவே நடிப்பார்கள். அதற்கு கடந்த வருடம் வந்த வெள்ளமே ஒரு சாட்சி. நமது ஹீரோக்கள் எத்தனை பேர் கோடிகளை அளித்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.

‘பைரவா’ படத்தின் முதல் போஸ்டரில் ‘கோட்’ அணிந்து ரிக்ஷாவில் அமர்ந்தும், நின்று கொண்டும் விஜய் போஸ் கொடுத்திருப்பதிலிருந்தே அவர் ஏழை மக்களுக்காகப் போராடுபவர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

‘கபாலி’ படம் போலவே ‘பைரவா’ படமும் ஒடுக்கப்பட்ட மக்களின் கதை என இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள். இது எங்கே போய் முடியப் போகிறதோ தெரியவில்லை…

Related Posts