Ad Widget

பெண் தாதியை மன்றில் ஆஜராக நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு

யாழ் போதனா வைத்தியசாலையில் ஜுலை மாதம் 8 ஆம் திகதி மேற்கொள்ளப்படவிருந்த தாதியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான தடையுத்தரவு தொடர்பான வழக்கு முடிவடையும் வரையில் அந்தத் தடையுத்தரவை யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் நீடித்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான பூரணமான தீர்ப்பு ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்துள்ள யாழ் மேல் நீதிமன்றம் அன்றைய தினம் இந்த வேலைநிறுத்தத்திற்குக் காரணமான பெண்தாதியை நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கான அழைப்பாணை விடுக்குமாறு நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை கூடத்த்pல் பணியாற்றும் பெண்தாதி ஒருவரை வைத்தியசாலை பணிப்பாளர் ஒழுக்காற்று விடயம் காரணமாக மற்றுமொரு பிரிவுக்கு உள்ளக இடம் மாற்றம் செய்ததை எதிர்த்து நடத்தப்பட இருந்த தாதியர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்க ஜுலை மாதம் 8 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் ஏறிகனவே அறிவித்திருந்த அறிவித்தலின்படி, 10 ஆம் திகதி புதன்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

தாதி ஒருவரின் ஒழுக்காற்று நடவடிக்கையாக வைத்தியசாலை பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்ட உள்ளக இடம் மாற்றம் காரணமாகவே இந்த வேலைநிறுத்தம் ஒழுங்கமைக்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகக் கூறிய நீதிபதி இளஞ்செழியன், ஒரு பெண் தாதியின் இடம் மாற்றத்திற்காக பொதுமக்களும், நோயாளிகளும் பாதிக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட வேலை நிறுத்தமானது சட்டத்திற்கு முரணானது என சுட்டிக்காட்டினார்.

அது தொடர்பில் நீதிபதி மேலும் தெரிவித்ததாவது:

சம்பந்தப்பட்ட பெண் தாதி அவருக்கு எதிரான ஒழுக்காற்று விசாரணையில் திருப்தியடையாதுவிட்டால், உள்ளக மேன்முறையீட்டு சபையிடம் முறையிட வேண்டும். அல்லது தனது உரிமையை நிலைநாட்டுவதற்கு நீதிமன்றத்தை நாட வேண்டும்.

ஒழுக்காற்று விசாரணையை நடத்தவிடாமல் தடுப்பதற்காகவே, தனிப்பட்ட ஒருவருடைய நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இந்த வேலை நிறுத்தப் போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரியவந்துள்ளது.

இதனால், தாதியர் சேவைக்கு இலக்கணம் வகுத்த புளோரன்ஸ் நைட்டிக்கேலின் சேவையை அவமானப்படுத்தும் வகையில் இப் பெண்தாதி நடந்துள்ளார் என்பதையும் காணக்கூடியதாக உள்ளது. எனவே, இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் பிரச்சினைக்குரிய பெண்தாதியின் இடம் மாற்றம் தொடர்பில் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது என வேலை நிறுத்தத்திற்கான இடைக்காலத் தடையுத்தரவை இந்த நீதிமன்றம் நீடித்து உத்தரவிடுகின்றது என்றார் நீதிபதி இளஞ்செழியன்.

இந்தப் பெண்தாதி சம்பந்தமான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு உத்தரவிட்டுள்ள நீதிபதி, இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளை முழுமையாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கு சட்டத்தரணிகளை எழுத்து மூலமான சமர்ப்பணங்களைச் செய்யுமாறு பணித்துள்ளார்.

அத்துடன் இந்த வழக்கின் பூரண தீர்ப்பு 30.10.2016 ஆம் திகதி வழங்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். அன்றைய தினம் பிரச்சினைக்குரிய பெண் தாதி மன்றில் ஆஜராக வேண்டும் என அழைப்பாணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Posts