Ad Widget

பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக முன்னாள் போராளிக்கு ஆயுள் தண்டனை

பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக பெண் ஒருவரைக் கடத்திச் சென்ற குற்றத்திற்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

அத்துடன், அதே நீதிமன்றத்தில் இடம்பெற்ற மற்றுமொரு வழக்கில், இராணுவ முகாமில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது, சக இராணுவ கோப்பரல் ஒருவரைக் கொலை செய்த குற்றத்திற்காக சிப்பாய் ஒருவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரண்டு வழக்குகளும் செவ்வாய்க்கிழமை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய, இராணுவத்தின் புனர்வாழ்வு பயிற்சி பெற்றதன் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றிய முன்னாள் போராளி ஒருவருக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் பயங்கரவாதச் செயற்பாட்டுக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டிருந்தார் என முறையிடப்பட்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் படையணித் தேவைக்காக 2007ம் ஆண்டு காலப் பகுதியில் விஜயபாலன் மஞ்சுளா என்ற தனது மகளை பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காகக் கடத்திச் சென்றார் என்று கணைஸ் கண்ணதாஸ் என்பவருக்கு எதிராக நாகரத்தினம் விஜயபாலன் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் திகதி இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

இதனையடுத்து, கணைஸ் கண்ணதாஸ் 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி பயங்கரவாதப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அவருக்கு எதிராக, பயங்கரவாதச் செயற்பாடுகளுக்காக விடுதலைப் புலிகளின் அமைப்புக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என குற்றம் சுமத்தி, 2016ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் முன்னிலையில், கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட பெண்ணின் தந்தை விஜயாபலனும், தாயார் சாந்திமலர் ஆகியோர் சாட்சியமளித்தனர்.

விடுதலைப் புலிகளின் செயற்பாட்டிற்காகத் தமது மகள் மஞ்சுளாவை தங்களுடைய வீட்டில் இருந்து கண்ணதாஸ் இழுத்துச் சென்றதாக அவர்கள் சாட்சியத்தில் தெரிவித்தனர்.

அத்துடன் இராணுவத்தினருடனான விடுதலைப் புலிகளின் சண்டையில் தமது மகள் கொல்லப்பட்டுவிட்டார் என்பதையும் அவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து பயங்கரவாதப் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்களின் சாட்சியத்தையடுத்து, எதிரி கண்ணதாஸ் சாட்சியமளித்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் உறுப்பினராக இருந்ததை ஒப்புக்கொண்ட அவர், இராணுவத்தினரால் வழங்கப்பட்ட புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் குடும்பத்துடன் இணைக்கப்பட்ட தான், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியதாகவும் தனது சாட்சியத்தில் கூறினார்.

விசாரணைகளின் முடிவில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இராணுவத்தின் புனர்வாழ்வுப் பயிற்சி பெற்று எதிரி விடுதலை செய்யப்பட்டிருந்தாலும், பயங்கரவாதச் செயற்பாட்டுக்காக ஆட்கடத்தலில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டிருப்பதனால், சட்டத்தின் அடிப்படையில் அவருக்குத் தண்டனை வழங்க வேண்டியிருப்பதாகத் தெரிவித்த நீதிபதி, குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதேவேளை, மற்றுமொரு வழக்கில் வவுனியா பம்பைமடுவில் இராணுவ முகாமில் சக இராணுவ கோப்ரல் தரத்திலான ஒருவரை மது போதையில் கொலை செய்த குற்றத்திற்காக சிப்பாய் ஒருவருக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அந்த இராணுவ முகாமில் 2011ம் ஆண்டு ஜுலை 20ம் திகதி நடைபெற்ற ஆண்டு பூர்த்திவிழா வைபவத்தின் போது, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தில், மது போதையில் இரண்டு இராணுவத்தினருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கொலையில் முடிந்திருந்தது.

இந்த சம்பவத்தில் நிரஞ்சன் குமார பண்டர என்பவரை கொலை செய்ததாக தனுஸ்க பணடார என்பவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கு விசாரணைகளின் முடிவில் மது போதையில் இருவருக்கும் இடையில் நடைபெற்ற வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறி கொலையில் முடிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் எதிரி குற்றவாளியாகக் காணப்பட்ட போதிலும், கொலை செய்யும் நோக்கம் அவருக்கு இருக்கவில்லை.

அத்துடன் இருவருமே மது போதையில் இருந்துள்ளனர் என தெரிவித்த நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் எதிரிக்கு இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நட்டயீடு வழங்க வேண்டும் என்றும், பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார் என, பிபிசி செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

இந்த இரண்டு வழக்குகளிலும் வழக்குத் தொடுனர் தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையாகி சாட்சிகளை நெறிப்படுத்தினார்.

Related Posts