Ad Widget

பெண்களுடன் சேஷ்டை செய்பவர்களைக் கைது செய்ய நீதவான் உத்தரவு

பருத்தித்துறை நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பெண் பிள்ளைகளிடம் சேஷ்டை செய்வோரைக் கைது செய்யுமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராசா உத்தரவுட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஞாயிற்றுக்கிழமை (31) கூறினார்.

புங்குடுதீவு மாணவி பாலியல் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பெண் பிள்ளைகளுக்கு அவ்வாறான சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லியடியிலுள்ள கல்வி நிலையங்கள், மகாத்மா திரையரங்கு, தொலைத்தொடர்பு நிலையங்கள் ஆகியவற்றுக்கு அருகில் நின்று பெண் பிள்ளைகளின் தொலைபேசி இலக்கங்களை கோருபவர்களையும் அவர்களைக் கேலி செய்து அவர்கள் அணிந்துள்ள தொப்பிகளைக் கழற்றுபவர்களையும் உடனடியாக கைது செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவம் நடைபெறுவதாக பொதுமக்களால் புகைப்படங்களுடன் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டை கவனத்தில் எடுத்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக பொறுப்பதிகாரி கூறினார்.

Related Posts