Ad Widget

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை, போதைப்பொருள் ஒழிப்புக்கு வடக்கில் வேலைத்திட்டம்! – சுமந்திரன்

வடக்கில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் மற்றும் போதைப் பொருள், மது பாவனையை முடிவுக்குக் கொண்டுவர விசேட சமூக வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும், இதற்காக அரச மற்றும் தனியார் அமைப்புகளுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

நீண்டகால நிகழ்ச்சித் திட்டமாக முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதுடன், மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் சரியான கல்வி புகட்டல்களையும், வழிகாட்டல்களையும் வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கில் மது பாவனை, போதைப் பொருள் துஷ்பிரயோகம் தொடர்பாக பாரியதொரு நடவடிக்கையை முன்னெடுக்க இருக்கின்றோம். அத்தோடு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மாணவர்களுக்கு சரியான கல்வி புகட்டல்களை வழங்குவதுடன், பெண்களை மதித்தல் சம்மந்தமாக கல்வி புகட்டல்களை மேற்கொள்ளவும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க உள்ளோம்.

பாடசாலை மாணவர்களுக்கும், இளம் வயதினருக்கும் சரியான விதத்தில் வழிகாட்டுகின்ற ஒரு செயற்திட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். அதைத் திடீரென்று செய்துவிட முடியாது. அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற ஒரு நிகழ்ச்சியை மிக விரைவில் நாங்கள் சமூக மட்டத்தில் நடத்துவோம்.

இது ஒரு நாளில் செய்து முடிக்கக்கூடிய விடயமல்ல. நீண்ட காலமாக செய்யவேண்டிய திட்டம். மாணவர்களுக்கு இந்த விடயங்களைப் பற்றி அறிவுறுத்துவதென்பது ஒரு நாளில் செய்ய முடியாத விடயம். ஆகையால் வடக்கு மாகாண சபை கூடுதலான பாடசாலைகளை நிர்வகிக்கின்ற சபையாக இருப்பதால் அத்தோடு மத்திய அரசிலும் இந்த விடயம் குறித்து கரிசனை காட்டுகின்ற அரச மற்றும் தனியார் அமைப்புகள் ஆகியவற்றுடன் பேசியிருக்கின்றோம். நீண்டகால வேலைத்திட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர இருக்கின்றோம் – என்றார்.

Related Posts