Ad Widget

புலிகள் விவகாரத்தை சரியாக கையாளாவிடின் பயங்கரவாதம் தலைதூக்கும் – பொன்சேகா

மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும் என்று முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

sarathfonseka

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டெய்லிமிரருக்கு அவர் வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே மேற்கண்டவாறு கூறினார். அந்த பேட்டியில் அவர் வழங்கிய தகவல்களின் சில பின்வருமாறு,

‘நான் நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை என்பதால் என்னால் நேரடியாக அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஈடுபடமுடியாது. எனினும், ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான பல கட்சித் தலைவர்கள் உறுப்பினராகவுள்ள தேசிய நிறைவேற்று அதிகார பேரவையில் அங்கத்தவராக உள்ளேன். விரைவில் வண.சோபித தேரரும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் இந்த பேரவையில் சேரவுள்ளனர்.

வடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை.

ஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன்.

சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசாங்கத்தின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும். இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசாங்கம் இதை செய்யவில்லை.

உண்மையில் முன்னைய அரசாங்கம், கே.பி, கருணா அம்மான், பிள்ளையான், எமில் காந்தன் ஆகிய புலித் தலைவர்களுக்கு செல்லம் கொடுத்திருந்தனர்.

இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் தவறினர். இவர்களை அரசாங்கம் தேவையான போது அரசியலுக்கு சாதகமாக பயன்படுத்தினர். வடக்கு, கிழக்கு மக்களை பயமுறுத்தவும் பயன்டுத்தினர். புலிகளுடன் சேர்ந்திருந்த புலம்பெயர்ந்தோருடன் தொடர்பு கொள்ளவும் இவர்களை தயக்கமின்றி பயன்படுத்தினர்.

இவ்வாறாக பயங்கரவாதிகளுடனும் அவர்களது ஆதரவாளர்களுடனும் தொடர்பு கொண்டிருந்தது முன்னைய அரசாங்கமேயன்றி நாம் அல்ல. நாம் இருக்கும்போது பயங்கரவாதிகள் ஒரு போதும் திரும்பிவரமாட்டார்கள்.

மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. நிலைமை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும். எனவே, அரசியல் தலைவர்களின் செயற்பாட்டிலேயே இந்த கேள்விக்கு பதிலுண்டு.

வடக்கில் இராணுவ பிரசன்னத்தை குறைக்க முடியுமென நான் நினைக்கின்றேன். எவ்வாறாயினும், யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது.

தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும். ஆனால், முன்னைய அரசாங்கம் அதை சரியாக திட்டமிடவில்லை. சில இராணுவ தலைமைகள் பெரிதாக கதைப்பினும் ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை. இதுதான் இங்குள்ள பிரச்சினை.

இராணுவம் தனது தொழில் வன்மை சார்ந்த வேலைகளில் மட்டுமே ஈடுபடவேண்டும். இராணுவத்தை வியாபாரத்தில் ஈடுபடுத்துதல், கூலியாட்களாக பயன்படுத்துதல் என்பன முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னைய பாதுகாப்பு செயலாளரால் முன்னெடுக்கப்பட்டவை. இது அவர்களின் சுயநலத்துக்காக மேற்கொள்ளப்பட்டது. தமக்கு விசுவாசமான சிலரை வைத்துக்கொண்டு, பாதுகாப்பு சேவை, மரக்கறி வியாபாரம் மற்றும் பல தொழில்களை அவர்கள் மேற்கொண்டனர். இது ஏற்க முடியாதது. இராணுவம் மரியாதையோடு நடத்தப்பட வேண்டும்.

அவர்களுக்கு கண்ட கண்ட வேலைகளை கொடுத்து அவர்களின் நற்பெயரை களங்கப்படுத்த கூடாது. படைவீரரை கூலியாட்களாக பயன்படுத்தகூடாது. படைவீரன் கூலியாள் அல்ல. இளைய ஆண்களும் பெண்களும் நாட்டுக்காக தியாகம் செய்யவே இராணுவத்தில் இணைகின்றார்கள். முன்னாள் செயலாளர்களுக்கு இது விளங்கவில்லை.

தேசத்துக்கு சேவையாக இராணுவம் இவ்வாறான வேலைகளில் ஈடுபட வேண்டுமென அவர் ஒரு டீ.வி நிகழ்ச்சியில் கூறினார். அவர் நேர்மையாக இதனை கூறியிருப்பின் அவராகவே முன்வந்து கழிவு வாய்க்கால்கள் துப்புரவு செய்து முன்னுதாரணமாக நடந்திருக்க வேண்டும்.

இந்த கூற்றுக்கள் அவர் மனநிலையை பிரதிபலிக்கின்றன. அவர் இராணுவ கடமையில் இருந்த போது, ஒருபோதும் சந்தோஷமாக இருக்கவில்லை. அவருக்கு இராணுவத்திலிருந்தது துக்கமாக இருந்தது. நாம் அவரை வாய்க்கால்களை சுத்தம் செய்ய அனுமதிக்கவில்லை. சுத்தம் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால்தான் அவர் இராணுவத்திலிருந்து விலகிச்சென்றார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் நாம் தீப்பந்த சின்னத்தில் தனித்து போட்டியிடுவோம். எமது கட்சியின் கொள்கை ஏனையவற்றிலிருந்து சற்று வித்தியாசமானது. ஒரு வித்தியாசமான அரசியல் அபிலாஷையை நாம் கொண்டுள்ளோம். நாம் போட்டியிட்ட பின்னர் ஓர் அரசாங்கத்தை அமைக்க ஆதரவு வழங்குவது பற்றி யோசிப்போம்.

எமது சிந்தனையோடு ஒத்துழைத்து போகுமாயின் நாம் அதனுடன் இணைவோம். இல்லையேல் எதிர்க்கட்சியில் அமர்வோம்’ என்று சரத் பொன்சேகா மேலும் கூறினார்.

Related Posts