Ad Widget

புலிகளை அழித்தது யார்? பாரூக்கின் கருத்துக்கு கூட்டமைப்பு கண்டனம்

tnaவிடுதலைப் புலிகளை இருந்த இடம் தெரியாது அழித்தது ´அல்லா´ தான் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் பாராளுமன்றத்தில் கடந்த 26ஆம் திகதி ஆற்றி உரையை தான் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஒரு மக்கள் பிரதி நிதி ´அல்லா´வின் பெயரில் அரசியல் செய்வது படு பிற்போக்குத்தனமானது.

மதவாத கருத்துக்களை முன் வைத்து முஸ்ஸிம் மக்களை திருப்திப்படுத்த நினைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களின் உணர்வுகளை இக்கருத்து எவ்வளவு தூரம் காயப்படுத்தும் என்பதை அறியாமல் இருப்பது வேதனையான விடையமாகும்.

விடுதலைப் புலிகளினதும் ஏனைய தமிழ் இயக்கங்களினதும் ஆயுதம் தாங்கிய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்களிடமிருந்து பிரித்துப்பார்க்கவோ வேறுபடுத்திப்பார்க்கவோ முடியாது.

உண்மையான விடுதலைக்கும், உரிமைக்குமான போராட்டத்தை ´அல்லா´ தான் அழித்தார் என்று மதத்தையும், இஸ்ஸாமிய மத கடவுளையும் வைத்து அரசியல் விளையாட்டு நடத்தும் படு பிற்போக்குத்தனத்தை ஹீனைஸ் எம்.பி கைவிட வேண்டும்.

அண்மைக்கலமாக குறிப்பாக வன்னி மாவட்டத்தில் தமிழ், முஸ்ஸிம் மக்களிடையே முரண்பாடுகளும், பேதங்களும் ஏற்பட காரணமாக இருந்த அரச தரப்பு வன்னி எம்.பிக்கள் தமிழ், முஸ்ஸிம் உறவுகள் சீராகி வரும் இன்றைய நிலையில் அரசியல் வறுமைக்குள் அகப்பட்டிருக்கும் வன்னி எம்.பியின் இவ் உரையானது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றுவதற்கு ஒப்பானதாகும்.

தமிழ் பிரதேசங்களின் அபிவிருத்தி, வேலை வாய்ப்பு, மீள் குடியேற்றம் போன்ற விடையங்களில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படும் நிலையில் தமிழ் மக்களின் உணர்வுகளையும், மனங்களையும், புரிந்து கொள்ள மறுப்பது கவலையளிக்கின்றது.

வன்னி மாவட்டதின் முன்னால் அமைச்சர்கலான நூர்தீன் மசூர், அபூபக்கர் போன்றவர்கள் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தவர்கள்.

அது போன்ற முஸ்ஸிம் தலைவர்கள் இன்று இல்லாமல் இருப்பது தமிழ், முஸ்ஸிம் மக்களின் துரதிஸ்ரமே.

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் வாக்குகளை நயவஞ்சகமாகவும், சலுகைகள் வழங்கியும், போலி வாக்குறுதிகள் வழங்கியும், மேசடி செய்த எம்.பிக்கள் இனியும் தமது அரசியல் வறுமையை நிறப்ப தமிழ் மக்கள் சந்தர்ப்பம் தர மாட்டார்கள் என்பதை உணர்ந்தே ஹீனைஸ் பாரூக் எம்.பி முஸ்ஸிம் மக்களின் ஆதரவை தக்க வைப்பதற்காக இது போன்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்.

எனவே குறித்த பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றிய உரையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts