விடுதலைப் புலிகளின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்குச் சொந்தமான ஒரு தொகை ஆயுதங்கள் அண்மையில் சுங்கத்தால் விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. நாடாளுமன்றத்தில் கூறிய கூற்றை பாதுகாப்பு அமைச்சகம் கடுமையாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஓய்வுவெற்ற ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா, இந்தக் கூற்றானது “முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் தவறானது” என்று நிராகரித்தார்.
அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைக்க எந்த ஆதாரமும் இல்லை என்றும் கூறினார்.
தேசிய பாதுகாப்பு விடயங்களை பொது மன்றங்களில் அரசியலாக்கவோ அல்லது தவறாக சித்தரிக்கவோ கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
2009 க்கு முன்னர் பிரபாரகன் நாட்டுக்கு கொண்டு வருவதற்கு முயற்சித்த பொருட்கள் தாய்லாந்தில் இருந்ததாகவும், அவையே தற்போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இராமநாதன் அர்ச்சுனா எம்.பி.நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் வெளியிட்ட கருத்துக்கள் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
இந்த நிலையில் பாதுகாப்பு அமைச்சின் மேற்கண்ட அறிக்கை வந்துள்ளது.