Ad Widget

புத்தூர் மக்கள் போராட்டத்தை முதலமைச்சர் நேரில் சென்று பார்வையிட்டார்

புத்தூர் மேற்கு பகுதியில் உள்ள இந்து மயானத்தை அகற்றக் கோரி அப்பகுதியில் முன்னெடுத்து வரும் சாத்வீக போராட்டத்துக்கு, வட மாகாண முதலமைச்சர் நேற்று (17) விஜயமொன்றினை மேற்கொண்டார்.

அத்துடன் அப்பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயானத்தை பார்வையிட்ட பின் பொதுமக்கள் மத்தியில் தனது நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.

“புத்தூர் கலைமதி பகுதியில் அமைந்துள்ள கிந்துசிட்டி மயான விடயம் ஒரு சிக்கலான தன்மையைக் கொண்டுள்ளது.

குறித்த மயானம் தொடர்பில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அரசியல் ரீதியாக இந்த விடயத்தை தீர்த்து வைப்பதென்பது நீதிமன்றத்துக்குகு எதிரானதாக அமையும் என்பதால் நாம் சற்று பொறுமையாக இருந்து இப் பிரச்சினையைக் கையாளவேண்டிய நிலை உள்ளது.

இப்பகுதியில் உள்ள இந்து மயானம் தொடர்பில் நீதவான் சில கருத்துக்களை உள்வாங்கி, அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

அந்த அடிப்படையில் தான் குறித்த சுடலை பார்வையிடப்பட்டது. மயானத்தில் அமைக்கும் சுற்றுமதிலை யார் அமைக்கிறார்கள் என்று கேட்ட போது, அதற்கு ஒழு குழு ஒன்று உள்ளதாகவும் அந்தக்குழு தான் இப் பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

எரிவாயு மூலம் தகனம் செய்வதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ள நீதவான் அறிறுத்தல் விடுத்ததாக அறியப்பட்டது. அதற்கமைய அவ்வேலைப்பாடுகள் காணப்படுகின்றன.

இவை ஒரு புறம் இருக்க, உங்களுடைய உணர்ச்சிகள் எங்களுக்கு நன்றாகத் தெரிகின்றன.

ஆனால், அதில் சில பிரச்சிணைகள் உள்ளன. மயானம் இருப்பது எனத் தெரிந்து கொண்டே, நீங்கள் அப்பகுதியில் வீடுகளைக் கட்டிவிட்டு, மயானங்களை அகற்றுங்கள் என்று கேட்பது முறையா? என்பதில் சட்டப் பிரச்சினை காணப்படுகிறது.

அந்த பிரச்சினையையும் நாங்கள் தெரிந்து கொள்வேண்டியவர்களாக இருக்கின்றோம். அதனால் தான் இதனுடன் தொடர்புபட்ட உறுதிகள், வரைபடங்கள் என்பவற்றை பரிசீலனைக்க்காக கேட்டிருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.

உங்களுடைய ஆர்பாட்டங்கள் மூலம் நீங்கள் வெளிப்படுத்திய வெளிப்பாடுகளுக்கு நான் மதிப்பளிக்கின்றேன். இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதற்கு எனக்கு கால அவகாசம் தேவை. இப்பிரச்சினை தொடர்பில் 21 நாட்களுக்குள் நல்லதொரு தீர்மானத்துக்கு வர முடியும்” என முதலமைச்சர் தெரிவித்தார்.

Related Posts