நான் சுதந்திரக் கட்சியை சேர்ந்தவன். அந்தக் கட்சிக்கு புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை தாங்குவதாகவுள்ளார். எனவே அந்தக் கட்சிக்குள் இருந்து அவருடன் செயற்பட தாயாராகவுள்ளதாக வடமாகாண சபை எதிர்க்கட்சி உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்று வெள்ளிக்கிழமை (16) தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
வடமாகாண சபை தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே போட்டியிட்டு வெற்றிபெற்றேன். அந்தக் கட்சியிலிருந்தே மக்கள் என்னைத் தெரிவு செய்தனர்.
புதிய ஜனாதிபதியுடன் இணைந்து பட்டதாரிகள் சங்கத்தை செயற்படுத்துவேன். அத்துடன், இதுவரை மேற்கொண்டு வந்த செயற்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து மேற்கொள்ளவுள்ளேன் எனத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நீலப்படையணியின் மூலம் யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரத்தில் அங்கஜன் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.