Ad Widget

புதிய அரசுத்துறைகளை உருவாக்கும் அதிகாரம் மாகாண அரசுக்கு உண்டு

இலங்கையின் மாகாணங்களுக்கு புதிய திணைக்களங்களை (அரசுத் துறைகள்) உருவாக்கும் அதிகாரம் இருக்கிறது என்று கூறுகிறார் முன்பு ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையில் முதல்வருக்கு செயலராகவும், பின்னர் கிழக்கு மாகாண முதல்வருக்கு ஆலோசகராகவும் பணியாற்றிய டாக்டர் கே.விக்னேஸ்வரன்.

இலங்கையின் வட மாகாணசபை முதல்வர் விக்னேஸ்வரன் சமீபத்தில் மாகாண கவுன்சிலில் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரையில், புதிதாக, வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து ஆகிய இரு துறைகளை உருவாக்கப்போவதாக அறிவித்திருந்த்து சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

மாகாண கவுன்சிலுக்கு இது போல புதிய துறைகளை உருவாக்கும் அதிகாரம் இல்லை என்றும், ஜனாதிபதி அல்லது ஆளுநரின் ஒப்புதலுடனேயே அவைகள் உருவாக்கப்படமுடியும் என்றும், மாகாண ஆளுநர் சந்திரசிரி கூறியிருப்பதாக செய்தி ஊடகங்கள் கூறின.

இந்த சர்ச்சை குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் கே.விக்னேஸ்வரன் இலங்கையின் மாகாண கவுன்சில் சட்ட்த்தின்படி, துறைகளுக்கான தலைவரை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு இருப்பதாகவும், ஆனால் புதிய துறைகளை முதல்வர்கள் தங்கள் அமைச்சரவை வாரியங்கள் ஒப்புதலுடன் ஆரம்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

ஆளுநர்கள் தங்கள் நிர்வாக அதிகாரங்களை மாகாண கவுன்சில் அமைச்சரவை ஊடாகவே செலுத்த முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய சர்ச்சை என்பது, மத்திய அரசுக்கும், வட மாகாணத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நடக்கும் “பனிப்போர்”தான் என்றும் அவர் கூறினார்.

Related Posts