Ad Widget

புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ்,முஸ்லிம் மக்கள் அச்சப்படத் தேவையில்லை – சந்திரிக்கா

அரசியல் காரணங்களால் பிளவுபட்ட சமாதானத்தை கட்டியெழுப்பி நல்லிணக்கத்தை ஏற்படுத்த மீண்டும் நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

chanthereccka-chan-

சட்டரீதியாக பெற்றுக்கொண்ட சமாதானத்தை உண்மையான சமாதானமாக்க வேண்டிய தேவை உள்ளது என்றும் புதிய அரசின் புதிய தேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இனி ஒருபோதும் அச்சம், சந்தேகத்துடன் வாழத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.

இலங்கையில் 67ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய சூறா சபையின் ஏற்பாட்டில் நேற்றுப் பிற்பகல்
கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனவரி 8 ஆம் திகதியின் பின்னர் நாட்டில் புதுயுகம், புது அரசியல் கலாசாரம் உருவாக்கப்பட்டுள்ளது. அனைவரும் சமாதானத்துடனும், நல்லிணக்கத்துடன் வாழக்கூடிய மைத்திரி யுகம் உருவாக்கப்பட்டுள்ளது.

எமது முன்னோர்கள் வெள்ளையர்களுடன் போராடி சமாதானத்தையும், சுதந்திரத்தையும் எமக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரும் சம உரிமையுடன் வாழக்கூடிய நிலையை ஏற்படுத்தினர்.

ஆனால், கடந்த சில தசாப்தங்களாக நிலவிய அரசியல் காரணிகளால் அந்த சமாதானம் பிளவுபட்டது. இவ்வாறான நிலையில் பிளவுபட்ட சமாதானத்தை மீளக் கட்டியெழுப்ப தற்போது மீண்டும் ஒரு பாரிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

அதற்கு மைத்திரி அரசு முன்வந்துள்ளது. ஆனால், அரசால் மட்டும் அதை தனித்துச் செய்ய முடியாது. எனவே, மக்கள் அனைவரும் தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” – என்றார்.

Related Posts