இலங்கையில் புதிய அரசமைப்பு விரைவில் உருவாக்கப்படவேண்டும். இந்தியா அதற்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். இந்த முயற்சி தோல்வியில் முடிவடைந்தால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட தீவிரமான போக்கைக் கொண்ட தலைமைத்துவம் உருவாகும். என்னால் சமாளிக்க முடியாத புதியதொரு போக்கு வடகிழக்கில் ஏற்பட்டுவிடும் என்று நான் பயப் படுகின்றேன்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியிடம் நேரில் எடுத்துரைத்துள்ளார்.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையிலான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழு இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடியை இந்தக் குழுவினர் நேற்றுச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இந்தக் குழுவில் பங்கேற்றுள்ள எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில், இந்தியத் தலைமை அமைச்சருக்கு எடுத்துரைத்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் நடைமுறையில் உள்ள அரசமைப்பில், இலங்கைக் குடிமக்கள் என்பதை நாங்கள் உணர்வதற்கான வாய்ப்பில்லை. இதனாலேயே புதிய அரசமைப்பு உருவாக்கப்படுகின்றது. இந்த முயற்சிக்கு இந்தியா தனது ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கவேண்டும். அதே நேரம் அது விரைந்து உருவாக்கப்பட அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டும்.
இந்த முயற்சி தோல்வியில் முடிந்தால், வடகிழக்குப் பிரச்சினை ஏற்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட தீவிரமான போக்கைக் கொண்ட தமிழ்த் தலைமைத்துவம் உருவாகும். நான் வயது முதிர்ந்த நிலையில் இருக்கின்றேன்.
இவ்வாறானதொரு நிலையில் இருந்து கொண்டே உங்களிடம் இந்தக் கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். இந்தக் கோரிக்கையை நீங்கள் உதாசீனம் செய்தால், என்னால் சமாளிக்க முடியாத புதியதொரு போக்கு வடகிழக்கில் ஏற்படும் – என்றார்.