Ad Widget

புங்குடுதீவு மாணவி கொலைச் சந்தேகநபர்கள் மூவரின் வீடுகள் பொதுமக்களால் எரிப்பு!

பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டுள்ள புங்குடுதீவு மாணவி படுகொலையுடன் சம்பந்தப்பட்ட மூவரின் வீடுகள் பொதுமக்களால் எரிக்கப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை மாலை புங்குடுதீவுப் பகுதியில் உள்ள சந்தேகநபர்களின் வீடுகளே பொதுமக்களால் தீக்கிரையாக்கப்பட்டன.

வீட்டில் இருந்தவர்களை வெளியேறிச் செல்லுமாறு கூறிய பொதுமக்கள் அவர்களில் வெளியேறியதும் வீடுகளை தீயிட்டுக் கொழுத்தினர் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதில் சுவிஸிலிருந்து வந்த சந்தேகநபர் தங்கியிருந்த வீடும் மற்றும் இரு சந்தேகநபர்களின் வீடுமே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதேவேளை – நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட 5 சந்தேகநபர்களை 48 மணி நேரம் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று யாழ். போதனாவைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக பொலிஸாரால் அழைத்துச்செல்லப்பட்டனர். இதன்போது வைத்தியசாலைக்குள் கூடிய பொதுமக்கள் அவர்களைத் தாக்கமுற்பட்டனர். இதனால் கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம் இருந்து சந்தேக நபர்களை பொலிஸார் காப்பாற்றி யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

கொலை தொடர்பாக 9ஆவது சந்தேகநபராக ஒருவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் முகவராகச் செயற்பட்டுவந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

புங்குடுதீவில் வீடு ஒன்றில் மறைந்திருந்தவேளையே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts