Ad Widget

பிள்ளைகள் உயிர் வாழ்கிறார்களென இன்னும் நம்புகிறீர்களா என சாட்சியங்களிடம் கேள்வி

உங்கள் பிள்ளைகள் இன்னும் உயிரோடு இருக்கின்றார்கள் என்று நீங்கள் இன்னமும் நம்புகின்றீர்களா? என்று காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவினர், தங்களிடம் சாட்சியங்களைப் பதிவு செய்ய வந்திருந்த சாட்சியங்களிடம் கேள்வி எழுப்பினர்.

missing-people-vanni

காணாமற் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சியங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கை ஞாயிற்றுக்கிழமை (28) முழங்காவில் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போதே, சாட்சியங்களிடம் மேற்படி கேள்வி எடுப்பப்பட்டது.

அத்துடன், புலிகள் உங்களை சுட்டார்களா?, பிள்ளைகளை புலிகளா கடத்தினரா?, இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் மக்களைச் செல்ல விடாது புலிகள் தடுத்தார்களா?, மக்களோடு மக்களாக கலந்து புலிகள் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் ஊடுருவினார்களா? போன்ற புலிகள் தொடர்பான பல கேள்விகளையும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கேட்டனர்.

இந்த கேள்விகளுக்கு பதிலளித்த பல சாட்சியங்கள், புலிகள் கட்டாய ஆள் சேர்ப்பின் போது எமது பிள்ளைகளை பிடித்துச் சென்றிருந்தார்கள். ஆனால் மக்களை அவர்கள் சுட்டது மற்றும் மக்களோடு மக்களாக ஊடுருவியது தொடர்பில் தெரியவில்லை என்றனர்.

அத்துடன், எமது பிள்ளைகள் இன்றும் உயிரோடு தான் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. உதவித்திட்டங்கள் எதுவும் எமக்கு வேண்டாம் எமது பிள்ளைகளே எமக்கு வேண்டும் எனவும் பலர் வலியுறுத்தினர்.

ஆணைக்குழுவின் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை (28) சாட்சியமளிப்பதற்கு 50 பேர் அழைக்கப்பட்ட போதிலும் 40 பேர் மாத்திரமே வருகை தந்து தமது சாட்சியங்களை அளித்திருந்தனர்.

இதன்போது, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த முழங்காவிலைச் சேர்ந்த வசந்தகுமாரன் பரணி என்ற தாய் கூறியதாவது,

எனது மகனையும் மகளையும் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் சென்றதை கண்டதாக உறவினர்கள் தெரிவித்தார்கள். அதன் பின்னர் அவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை. குழந்தைகளைக் காணாது, எனது கணவருக்கு மனநோய் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், என் பிள்ளைகள் தற்போதும் உயிரோடு இருக்கின்றார்கள் என நம்புகின்றேன்.

எனது 17 வயதுடைய மகனும் 19 வயதுடைய மகளும் 2009ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி வட்டுவாகல் பகுதியில் வைத்து காணாமற் போயினர். நானும் எனது கணவரும், எங்களது மற்றொரு மகனுடன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றோம். பின்னர் வலயம் 4 முகாமில் தங்கி இருந்தோம். அவ்வேளை, எனது மகனையும் மகளையும் புனர்வாழ்வு முகாமுக்கு அழைத்துச் சென்றதை கண்டதாக உறவினர்கள் எம்மிடம் தெரிவித்தார்கள்.

அதன் பின்னர் அவர்கள் பற்றிய எந்த தகவலும் இல்லை எனது கணவருக்கு தற்போது மனநோய் ஏற்பட்டுள்ளது. எனது மகனின் உழைப்பிலேயே நாம் வாழ்கின்றோம்’ என அந்த தாய் தெரிவித்தார்.

தடுப்பு முகாமிலிருந்த மகளை காணவில்லை

ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த முழங்காவில், நாகபடுவான் பகுதியைச் சேர்ந்த சின்னையா சண்முகநாதன் என்ற குடும்பஸ்தர் சாட்சியமளிக்கையில், ‘பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாமில் எனது மகள் இருப்பதாக தகவல் கிடைத்து அங்கு சென்று பார்க்கும்போது, அப்படி யாரும் இல்லை என்று இராணுவத்தினர் எங்களை அனுப்பிவிட்டனர்’ என்று கூறினார்.

காணாமற்போன எமது மகள் சஜீதா 2003ஆம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். எமது குடும்பத்தினர் அனைவரும் நல்லூர் திருவிழாவுக்கு செல்வதற்கு 2009 ஓகஸ்ட் மாதம் 9ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்குச் சென்றோம். 11ஆம் திகதி யுத்தம் ஆரம்பமாகி ஏ–9 பாதை மூடப்பட்டதால் நாங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்துவிட்டோம்.

யுத்தம் முடிந்த பின்னர் நாம் எமது மகளை தேடிய போது, பம்பைமடு பெண்கள் தடுப்பு முகாமில் மகள் இருப்பதாக தகவல் அறிந்து அங்கே சென்றேன். முகாம் வாசலில் நின்ற பொலிஸாரிடம் மகளின் பெயரை சொல்லி, அவர் இந்த தடுப்பு முகாமில் இருக்கின்றார் என தகவல் கிடைத்தது அவரை பார்க்க வேண்டும் எனக் கூறினேன்.

அந்த பொலிஸார் உள்ளே சென்று கேட்கும் படி கூறினாரகள். தடுப்பு முகாமுக்குள் சென்று அங்கிருந்த இராணுவ வீராங்கனையொருவரிடம் எனது மகளின் பெயரைக் கூறி விசாரித்தபோது, எனக்கு பின்னால் இருந்த பெண் இராணுவ சிப்பாய் ‘சுது கெல்லொ’ (வெள்ளைப் பெண்கள்) என கூறினார்.

நான் உடனே அவரை திரும்பி பார்த்த போது அவர் வேறு எதுவும் கதைக்காமல் நின்றார். பின்னர் அங்கிருந்த ஏனைய இராணுவ வீராங்கனைகள், இந்த பெயரில் யாரும் இங்கு இல்லை எனக்கூறி என்னை அங்கிருந்து அனுப்பிவிட்டனர்’ என சாட்சியமளித்தார்.

இராணுவத்தினர் சுற்றிவளைத்து மகனை கைது செய்தனர்

எனது மகனை கிளிநொச்சியில் இராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இன்று வரை மகனைப் பற்றிய எந்த தகவலும் இல்லை என பல்லவராயன்கட்டையைச் சேர்ந்த சடம்பநாதன் சதாசிவம் சாட்சியமளித்தார்.

பல்லவராயன் கட்டில் இருந்து இடம்பெயர்ந்து வட்டக்கச்சியில் தற்காலிகமாக கொட்டகை அமைத்து இருந்த போது, எனது மகன் மகிந்தனும் எனது தம்பியும் கிளிநொச்சியில் தொண்டு நிறுவனம் ஒன்று வழங்கும் உதவிப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக 2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 17ஆம் திகதி கிளிநொச்சிக்கு சென்றிருந்தார்கள்.

அவ்வேளை, திடீரென கிளிநொச்சிக்குள் நுழைந்த இராணுவத்தினர், மகனையும் எனது தம்பியையும் சுற்றி வளைக்க முற்பட்ட போது எனது தம்பி மட்டும் அதில் இருந்து தப்பி வந்துவிட்டார். மகனை இராணுவத்தினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். அதன் பின்னர் மகன் பற்றிய எந்த தகவலும் இல்லை என தெரிவித்தார்.

வெள்ளை வானில் மகன் கடத்தல்

வவுனியாவில் விடுதி ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த மகனை, வெள்ளை வானில் வந்தவர்கள் கடத்திச் சென்றுள்ளார்கள் என நாகபடுவானைச் சேர்ந்த சிவானந்தம் சிவகௌரி என்ற தாய், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.

யுத்தம் காரணமாக நாம் நாகபடுவானில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவில் வசித்து வந்தோம். அவ்போது மகன் வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றில் வேலை செய்து வந்தார்.

விடுதியில் வேலை செய்து வந்த மகனை 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி இரவு 7 மணியளவில் வெள்ளை வானில் வந்தவர்கள் அழைத்துச் சென்றார்கள். அதன் பின்னர் இன்று வரை எமது மகன் பற்றிய எந்த தகவலும் கிடைக்க பெறவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts