யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒழுக்கம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இங்கு வாழ்பவர்களில் அதிகமானோர் சட்ட ஒழுங்குகளை மதிப்பதில்லை. இவ்வாறு யாழ்.பொலிஸ் அத்தியட்சகர் விஜிர குணரத்ன தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்களுக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையே யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையக் கேட்போர் கூடத்தில் சந்திப்பு நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-
போக்குவரத்து விதிமுறைகளை இங்குள்ள வாகனச் சாரதிகள் அறவே மதிப்பதில்லை. அதனாலேயே அதிக வாகன விபத்துக்களும் உயிரிழப்புக்களும் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இங்குள்ள வாகனச் சாரதிகள் உயிரிழப்புக்களை ஏற்படுத்தும் வகையில் பொறுப்பற்ற விதமாக வாகனங்களைச் செலுத்துகின்றனர். அவர்கள் விபத்துக்குள்ளாகி தங்கள் உயிர்களையும் மற்றையவர்களின் உயிர்களையும் எடுக்கின்றனர்.
வருடம் ஆரம்பித்து ஒரு சில நாள்களே ஆன நிலையில் யாழ்ப்பணத்தில் நடந்த வீதி விபத்துக்கள் காரணமாக பிஞ்சுக் குழந்தை உட்பட சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர். வீதி விபத்துக்களைத் தடுப்பதற்காக நாம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றோம். வாகனச் சாரதிகளை வழி மறித்து அவர்களுக்கு வீதி விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வுகளை வழங்கி வருகின்றோம். ஒவ்வொரு கிராமங்களிலும் ஒலி பெருக்கி ஊடாக மக்களுக்கு அறிவூட்டி வருகின்றோம்.
உங்கள் பிள்ளைகள் யாழ்ப்பணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சமூக விரோதச் செயல்களுடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டுடன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் இளமையானவர்கள். அவர்களை இங்கு யாரும் இயக்கவில்லை. அவர்கள் சினிமாப் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் போல் ஒரு வாளையும் மோட்டார் சைக்கிள்களையும் எடுத்துக் கொண்டு வீதியில் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
இந்த நடவடிக்கை எம்மைப் பொறுத்த வரையில் சட்டத்துக்கு முரணான விடயமாகும். அதனாலேயே நாம் கைது செய்தோம்.கைது செய்து விளக்கமறியலில் உள்ள உங்களின் பிள்ளைகள் நீதிமன்றால் தீர்ப்பளிக்கப்படும் வரை நிரபராதிகள். அவர்கள் சில வேளைகளில் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வெளியில் வரலாம்.
சமூகத்தில் நல்லொழுக்கத்துடன் வாழ்வதற்கு பெற்றோர்களாகிய நீங்கள் புத்திமதியைக்கூறி அவர்களை நல்வழிப் படுத்துங்கள். உங்கள் பிள்ளைகள் தற்போது சிறிய குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது உங்களுக்குத் தெரியாது நீண்டகாலமாகியிருந்தால் அவர்கள் பெரும் குற்றங்களைச் செய்தி ருப்பார்கள். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலங்களில் நலன் கொண்டு அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.-என்றார்.
எமது பிள்ளைகள் கைது செய்யப்படும்வரை அவர்கள் இவ்வாறான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. உண்மையில் சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டார்களா என்றும் எங்களால் தீர்மானிக்க முடியவில்லை. நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் சென்று வருவார்கள். இவ்வாறான செயல்களுடன் தொடர்பு வைத்திருக்கின்றார்கள் என எமக்கு இறுதி வரை தெரியாது. தெரிந்திருந்தால் நாங்கள் அவர்களை நல்வழிப்படுத்தி இருப்போம். எமது பிள்ளைகள் இதனை செய்தார்கள் என்று இன்றும் எங்களால் நம்பமுடியவில்லை என்று கலந்துரையாடலில் கலந்து கொண்ட பெற்றோர்கள் கண்ணீர் விட்டழுதனர்.